*பண்ணைகளில் தீவிர தடுப்பு நடவடிக்கை
சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களில் சுமார் 50 ஆயிரம் கோழிகள் பலியானது. இதையடுத்து பண்ணைகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சதும் மண்டலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் பறவைகள் பலியாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இதேபோல் நேற்றுமுன்தினம் சதும் மண்டலத்தில் உள்ள கோழி பண்ணையில் நூற்றுக்கணக்கான கோழிகள் அடுத்தடுத்து இறந்தன. இதுகுறித்து தகவலறிந்த மண்டல வருவாய்த்துறை ஆய்வாளர் பிரமிளா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்த கோழிகளை பரிசோதனைக்காக விஜயவாடா ஆய்வு கூடத்திற்கு விரைந்து அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வில் பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மண்டல வருவாய் துறை அதிகாரி பிரமிளா தலைமையில் கால்நடைத்துறை மருத்துவர்கள் அதேபகுதியில் உள்ள பண்ணைகளுக்கு மீண்டும் சென்று ஆய்வு செய்தனர். அங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் மற்றும் பிராய்லர் கோழிகளுக்கு நோய் தடுப்பு மருந்து கொடுத்தனர். மேலும் பண்ணை முழுவதும் தடுப்பு மருந்து தெளித்தனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் சுமார் 50 ஆயிரம் கோழிகள் பலியாகி இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து மண்டல வருவாய்த்துறை அதிகாரி பிரமிளா கூறுகையில், `அன்னமய்யா மாவட்டம் சதும் பகுதியில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழி பண்ணையில் அதிக அளவில் நாட்டுக்கோழிகள் மற்றும் பிராய்லர் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களில் இதுவரை 3 கோழிப்பண்ணைகளில் சுமார் 33,000 கோழிகள் இறந்தது தெரியவந்தது.
மேலும் உயிரிழந்த நாட்டு கோழிகளை பரிசோதனை செய்ததில் பறவைக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டது. எனவே இப்பகுதி மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இயங்கும் பல்வேறு கோழிப்பண்ணையில் கிருமிநாசினி மருந்து தெளித்து வருகிறோம். எனவே பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். குழந்தைகள், முதியோர்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
`இறந்த காகம், கோழிகளை கையால் தொட வேண்டாம்’
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், `தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஆங்காங்கே பறவை காய்ச்சல் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல இடங்களில் காகம், கோழி உள்ளிட்டவை கொத்து கொத்தாக இறந்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.
எனவே இறந்த காகங்கள் அல்லது பறவைகளை வெறும் கையால் பொதுமக்கள் தொடக்கூடாது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏதாவது பறவை இறந்தால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புக்கு தெரிவிக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
