ஜலந்தர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகின்றது. ஜலந்தரை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி தலைவரான ஒபராய் காரில் குருத்வாராவிற்கு வந்திருந்தார். அவர் குருத்வாராவில் வழிபாட்டை முடித்துவிட்டு காரில் புறப்படத் தயாரானார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவர் வாகனத்தில் அமர்ந்திருந்த போதே துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். சுமார் 8 முதல் 10 சுற்று வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், லக்கி ஓபராய் உடலில் 5 குண்டுகள் பாய்ந்தன. அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி அங்கே ஓடிவந்தனர். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
ஒபராயை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிசிடிவிகேமராவின் காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது’ என்று பக்வந்த் மான் தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளன.
