காங்கிரஸ் தலைவர் கார்கே விளாசல் ராகுல் காந்தியின் கேள்விக்கு பிரதமர் மோடி பயப்படுகிறார்: எப்ஸ்டீன் கோப்புகளால் கலக்கமடைந்துள்ளார்

புதுடெல்லி: ‘ராகுல் காந்தி என்ன கேள்வி கேட்பாரோ என பயந்து போய் தான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வராமல் இருக்கிறார். எப்ஸ்டீன் கோப்புகள் வெளிவந்ததால் அவர் கலக்கத்தில் இருக்கிறார்’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நேற்று முன்தினம் பதிலளித்து பேசிய பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக விமர்சித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் உரை குறித்து நேற்று கூறியதாவது:

பொய்களை மீண்டும் மீண்டும் கூறுவதுதான் மோடியின் வேலை. அவரது 97 நிமிட பதிலுரையில், முக்கியமான, அவசியமான எதையும் கூறவில்லை. ஜனாதிபதி உரை குறித்து நாங்கள் முன்வைத்த ஒரு கருத்திற்கு கூட மோடி பதிலளிக்கவில்லை. 100 ஆண்டுகள், 75 ஆண்டுகள், 50 ஆண்டுகள் என பேசிக் கொண்டே இருந்தார். நரவனே புத்தகம் பற்றி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய போது ஏதோ ஒரு காரணத்திற்காக ஆளும் தரப்பு முழுவதுமாக புண்பட்டது போல் உணர்ந்தது.

முதலில் உண்மையை கேளுங்கள், பிறகு பதிலளியுங்கள். ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மோடிக்கு துணிச்சல் இல்லை என்பதுதான் உண்மை. அவைக்கு வெளியே இரண்டு பேருக்கு இடையே நடந்த உரையாடல் மூலம் நாங்கள் ஒட்டுமொத்த சீக்கியர்களை அவமதித்ததாக மோடி முத்திரை குத்துகிறார். காங்கிரஸ் கட்சி சீக்கியர்களை மிகவும் மதிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்தார்.
ஆனால் மோடி சீக்கியர்களையோ, தலித்துகளையோ, பழங்குடியினரையோ மதிப்பதில்லை.

மற்றவர்களை எப்படி இழிவுபடுத்துவது என்பது மட்டும்தான் அவரது மனதில் உள்ளது. நவீன இந்தியாவின் நிறுவனர் ஜவஹர்லால் நேரு, பொதுத்துறை நிறுவனங்களை நிறுவினார். ஆனால் மோடி அவற்றை திவால்நிலை தொழிற்சாலைகள் என்று அழைக்கிறார். பொதுத்துறையைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, மோடி அதைச் சிதைக்க வேலை செய்கிறார். மோடிக்கு எந்த சித்தாந்தமும் இல்லை.

நாட்டை வழிநடத்த அவருக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை. , அவரது மன உறுதி உடைந்துவிட்டது, அவரது பொலிவு மங்கிவிட்டது என்பதைக் காட்டுகின்றன. பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் ஜனநாயகம் மற்றும் நாட்டிற்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அது நல்லதல்ல. ராகுல் காந்தி என்ன கேள்விகளைக் கேட்பார், என்ன சொல்வார், என்ன உண்மைகளை முன்வைப்பார் என்று மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவையில் கூட அமர்வதில்லை.

தொடர்ந்து 5 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்குவது ஜனநாயகத்தின் தோல்வி. மக்களவையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைக்கு அரசே காரணம். மோடி அரசு ஜனநாயக முறையில் அவையை நடத்தக் கூட விரும்பவில்லை. கடந்த சில நாட்களாக மோடி தொடர்பான விஷயங்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்ததால் அவர் கலக்கமடைந்துள்ளார். அதன்பிறகு டிரம்பிடம் சரணடைந்து வர்த்தக ஒப்பந்தம் செய்தார். இதன் மூலம் நாட்டின் விவசாயிகளை பலிகொடுத்தார். நமது மக்களை ஏழைகளாக்கி, அமெரிக்க விவசாயிகளை பணக்காரராக்குகிறார். இவ்வாறு கார்கே கூறினார்.

* உங்கள் உளவுத்துறை இவ்வளவு சிறப்பானதா?
மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதி நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கார்கே கூறுகையில், ‘‘மக்களவை சபாநாயகர், உளவுத்துறை தகவல் கிடைத்தது என்று கூறி, ஜனாதிபதி உரைக்கு மக்களவையில் பதிலளிக்க வேண்டாம் என்று மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார். உங்கள் உளவுத்துறை இவ்வளவு சிறப்பாக இருந்தால், புல்வாமா போன்ற தீவிரவாதத் தாக்குதல்களின் போது அது எங்கே சென்றது? நாடு முழுவதும் கும்பல் படுகொலைகள் நடக்கின்றன, பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. அப்போது இந்த உளவுத்துறை எங்கே செல்கிறது?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: