மதுரை: மதுரை அருகே, இன்று காலை அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி மகன் செந்தில்குமார் (36). அதிமுக இளைஞர் – இளம்பெண்கள் பாசறை கிளைக்கழக நிர்வாகி. சாமநத்தம் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர். இவர் கிராமத்தில் அரசுப்பள்ளி அருகே டீக்கடை நடத்தி வந்தார். இன்று காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு டீக்கடைக்கு வந்தார்.
அப்போது, திடீரென அங்கு வந்த மர்மநபர்கள் 4 பேர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், மர்மக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின், செந்தில்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ‘அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரவு நேரத்தில் செந்தில்குமாரின் டீக்கடையில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை செந்தில்குமார் கண்டித்துள்ளார். இதனால், ஏற்பட்ட விரோதத்தில் அவரை வெட்டி கொன்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான செந்தில்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
