திருவள்ளூர்: தம்பதி சண்டைக்கு நியாயம் கேட்க சென்ற டிரைவரை சரமாரியாக கத்தியால் குத்திக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த புட்லுார் கிராமத்தை சேர்ந்த தம்பதி ராஜேந்திரபாபு (40), இந்துமதி (34). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், ராஜேந்திர பாபு இறந்தவிட்ட நிலையில், இந்துமதி தனது 2 பிள்ளைகள், தாய், தந்தையுடன் புட்லூரில் வசித்து வருகிறார். பூங்கா நகரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்துமதி தனது குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச்செல்லும்போது பூங்கா நகர் அப்பாசாமி சாலையை சேர்ந்த மெடிக்கல் பிரதிநிதி அசோக்குமார் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதன்பிறகு ரகசியமாக திருமணம் செய்துகொண்டு அப்பாசாமி சாலையில் வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்களுடன் குழந்தைகளும் வசித்துவந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அசோக்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து இந்துமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த இந்துமதி தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு புட்லூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கிவிட்டார். இதையடுத்து நேற்று மாலை குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துவந்தபோதுஅங்கு வந்த அசோக்குமார் இந்துமதியை மறித்து தகராறு செய்துள்ளார். இதனால் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேகமாக சென்று குண்டுமல்லி தெருவில் வசித்துவரும் தனது உறவினரும் டாக்ஸி டிரைவருமான சந்திரபோஸ் (41)என்பவரின் வீட்டுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்துள்ளார்.
இதையடுத்து இரவு 10.15 மணியளவில் சந்திரபோஸ், தனது நண்பரும் டாக்சி டிரைவருமான நித்தியானந்தம் (38) என்பவருடன் சென்று குண்டுமல்லி தெருவில் நின்றுகொண்டிருந்த அசோக்குமாரிடம், ‘’உன்னை விட்டு பிரிந்து சென்று விட்ட இந்துமதியிடம் அடிக்கடி ஏன் தகராறு செய்கிறாய்’’ என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபம் அடைந்த அசோக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் சந்திரபோசை குத்திக்கொல்ல முயன்றுள்ளார். அப்போது தடுத்துநண்பரை காப்பாற்ற முயன்ற நித்தியானந்தத்தை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அசோக்குமார் ஓடிவிட்டார். இதில் மயக்கம் அடைந்துவிழுந்த நித்தியானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி தமிழரசி உத்தரவின்படி, திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் போலீசார் சென்று விசாரித்துவிட்டு நித்தியானந்தம் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
