நாகர்கோவில்: குமரியில் 10 சிம்கார்டுகளை மாற்றி ஆண்களிடம் பணம் பறித்த கல்லூரி பெண் ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மேல்பாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி (பெயர் மாற்றம்), 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் ராணுவ வீரர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டு திரும்பி சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
இதையடுத்து கவிதாவிற்கு ரயில்வேத்துறை, ராணுவம் சார்பில் தலா ரூ.50 லட்சம் என்று ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது. இதற்கிடையே கவிதாவின் மகன்கள் அதே பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் முறையே 6, 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். அப்போது ஒரு மகனின் நண்பனின் தாயான சவுமியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், ராணுவவீரரின் மனைவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. சவுமியாவின் கணவரும் ராணுவத்தில் பணியாற்றுவதால் 2 பேரும் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இந்தநிலையில் கவிதாவிற்கு ரூ.1 கோடி பணம் கிடைத்து இருப்பதை அறிந்த சவுமியா அதனை மோசடி செய்ய திட்டமிட்டார். அதன்படி சவுமியா, கவிதாவிடம் தங்களிடம் குழு ஒன்று இருப்பதாகவும் அதில் ரூ.1.5 லட்சம் செலுத்தினால் ரூ.8 லட்சம் வரை கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய கவிதா பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து குழுக்களில் பணத்தை பலர் கட்டாமல் உள்ளதாகவும் அதை கட்டினால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறினார்.
இதையும் நம்பிய கவிதா மேலும் ரூ.30 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு எந்த பணம் திரும்பி வரவில்லை. இது ஒருபுறம் இருக்க சவுமியா, பணம் கொடுத்து ஏமாந்து வரும் கவிதாவின் அறியாமை குறித்து தனது தோழியான உத்திரகோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றும் பெண் ஊழியரிடம் கூறியுள்ளளார். இதையடுத்து கல்லூரி பெண் ஊழியர் கவிதாவிடம் தான் வங்கி மேலாளர் எனக்கூறி அறிமுகமாகி உள்ளார். இதையடுத்து பெண் ஊழியர் தாங்கள் விதவை என்பதால் பல்வேறு வழிகளில் பணம் வர உள்ளதாகவும் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறினார். இதை நம்பிய கவிதா ரூ.70 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட 2 பெண்களும் பல்வேறு வழிகளில் கூறி கவிதாவிடம் இருந்து மேலும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகையை பெற்று கொண்டனர். மொத்தமாக கவிதாவிடம் இருந்து ரூ.1.30 கோடி மதிப்பில் பணம், நகையை மோசடி செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தான் கவிதா தான் கட்டிய பணத்தை கேட்டுள்ளார். ஆனால் கல்லூரி பெண் ஊழியர், சவுமியா வெவ்வேறு எண்களில் இருந்து அழைத்து பேசி உள்ளனர். மேலும் கவிதாவை வரவழைத்து அவரை கொல்ல திட்டம் போட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து தான் ஏமாற்றபட்டதையும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த கவிதா இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மோசடியில் ஈடுபட்ட சவுமியா, பெண் ஊழியர் குறித்து விசாரித்தனர். அதில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கல்லூரி பெண் ஊழியர் மற்றும் சவுமியா தலைமறைவானது தெரியவந்தது. பெண் ஊழியர் சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது. 2 பெண்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே போலீசாரின் தொடர் விசாரணையில் மோசடி புகாரில் சிக்கிய தனியார் கல்லூரி பெண் ஊழியர் 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை மாற்றி பல ஆண்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி பணம் பறித்துள்ளது தெரியவந்தது. அதாவது பணம் அதிகம் வைத்துள்ள ஆண்களை குறிவைத்து அவர்களிடம் மயக்கும் விதத்தில் பேசி பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
