வந்தே பாரத் ரயில் சேவைக்காக ராமேஸ்வரம் ரயில்கள் நேரம் மாற்றம்

 

மானாமதுரை: ராமேஸ்வரம்-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ள நிலையில், ராமேஸ்வரம் செல்லும் மற்ற ரயில்களின் நேரம் ஏப்.6ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:16849) நேரம் மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மானாமதுரைக்கு தற்போது 9.45 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயில் ஏப்.6ஆம் தேதி முதல் 9.40 மணிக்கு (5 நிமிடங்கள் முன்னதாக) மானாமதுரை வந்தடையும். அங்கிருந்து 9.45 மணிக்கு புறப்பட்டு பரமக்குடிக்கு 10.08 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.38 மணிக்கும், மண்டபத்திற்கு 11.09 மணிக்கும், ராமேஸ்வரத்திற்கு 12.35 மணிக்கும் சென்றடையும்.

திருவனந்தபுரம் – ராமேஸ்வரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் (வண்டி எண்:16343) நேரம் திண்டுக்கல் முதல் ராமேஸ்வரம் வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 8.25 மணிக்கு திண்டுக்கல் வந்தடைந்து 8.30 மணிக்கு புறப்படுகிறது.
இந்த ரயில் ஏப்.6ஆம் தேதி முதல் காலை 8.05 மணிக்கு (20 நிமிடங்கள் முன்னதாக) திண்டுக்கல் வந்தடைந்து, 8.10 மணிக்கு புறப்படும். மதுரைக்கு 9.20 மணிக்கும், மானாமதுரைக்கு 10.03 மணிக்கும், பரமக்குடிக்கு 10.23 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.48 மணிக்கும், ராமேஸ்வரத்திற்கு 12.15 மணிக்கும் சென்றடையும்.

இதேபோல, ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் (வண்டி எண்:56714) பகல் 11.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 11.30 மணிக்கு புறப்பட்டு பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், உச்சிப்புளி, வாலாந்தரவை ரயில் நிலையங்களை கடந்து ராமநாதபுரத்திற்கு பகல் 12.49 மணிக்கு பதிலாக (16 நிமிடங்கள் முன்னதாக) 12.33 மணிக்கு வந்தடையும். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு பரமக்குடிக்கு மதியம் 1 மணிக்கும், மானாமதுரைக்கு மதியம் 1.40 மணிக்கும் வந்தடையும். மானாமதுரையில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான் வழியாக மாலை 3.05 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வரும் மார்ச் மாதம் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக மேற்கூறிய ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜன.1ஆம் தேதி முதல் அமலான புதிய ரயில் கால அட்டவணையில் மேற்கூறிய 3 ரயில்களின் நேரம் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: