திருப்புவனம்: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்தில் ‘செல்பி பாயிண்ட்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் நடைபெற்ற தொடர் அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற அரிய வகை பானை ஓடுகள், பாசி மணிகள், அணிகலன்கள் உள்ளிட்ட சங்க கால அரிய பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கடந்த 2023ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்தவெளி அருங்காட்சியகப் பணிகளை முதல்வர் காணொலி மூலம் துவக்கி வைத்தார். மொத்தம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 5,914 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு கட்டங்களாக திறந்தவெளி அருங்காட்சியகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகத் தரத்திலும், பார்வையாளர்களை கவரும் வகையிலும் நவீன முறையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
நுழைவு வாயிலில் இருபுறமும் தமிழரின் பாரம்பரிய ஜல்லிக்கட்டை உணர்த்தும் வகையில் காளைகள் உருவம் பொரிக்கப்பட்டுள்ளது. மேலும், `கீழடி நம் தாய்மடி’ என்ற வாசகத்துடன் கூடிய `செல்பி பாயிண்ட்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் பிப்ரவரி மாத இறுதியில் முடிந்து திறந்தவெளி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
