ஊட்டி: தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் 80 ஆயிரம் அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள், மூலிகை நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் பழ ரசங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.
பூங்கா மற்றும் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பழங்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வது மட்டுமின்றி, ஜாம், ஊறுகாய் மற்றும் பழ ரசங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அலங்கார செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி அருகே தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் பல்வேறு வகையான அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்காக 80,000 அலங்கார செடிகள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த அலங்கார செடிகளை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
