சென்னை: திமுக தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி., சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகிறோம். எங்களுடைய இணையதளம், செயலியில் உங்களுடைய கருத்துகளையும் தெரிவிக்கலாம். எழுத்து பூர்வமாக தெரிவித்தால் அதையும் நாங்கள் தேர்தல் அறிக்கையில் இணைத்து கொள்வோம். திமுக- காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குழுவில் இருக்கக்கூடியவர்கள் தான் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த மற்ற விஷயங்களை பேசுவார்கள். இதுவரையில் தொகுதிகள் பற்றி பேசப்படவில்லை, எனவே, நான் அதைப்பற்றி கருத்து சொல்ல முடியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஒவ்வொரு முறை பேச முற்படும் போதும் தடுக்கப்பட்டு அவரது உரையை பதிவு செய்ய முடியாத சூழல் இருந்ததால் தான் அங்கிருந்த அத்தனை பேரும் அமளியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. திமுக கூட்டணிக்கு யாராவது புதிதாக வந்தால் முதல்வர் அதுகுறித்து அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
