கோவை தெற்கில் மீண்டும் டார்ச் லைட்?

தமிழகத்தில் நடந்த 2021 சட்டமன்ற தொகுதியில் மிகவும் பேசப்பட்ட மற்றும் அனைவராலும் கூர்ந்து பார்க்கப்பட்ட தொகுதியாக கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி இருந்தது. இந்த தொகுதிக்கான நட்சத்திர அந்தஸ்து அளித்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தான். அப்போது, அவர் டார்ச் லைட் சின்னத்தில் தனியாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜ சார்பில் வானதி சீனிவாசன், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். வெற்றி வாய்ப்பை பெற சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டனர்.

இதனால் தேர்தல் துவங்கிய நாள் முதல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை மிகவும் பரபரப்பான சூழ்நிலை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இருந்தது. தேர்தல் முடிவில் 1,728 வாக்குகள் முன்னிலையில் பாஜ சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய கமல்ஹாசன் மிக கடுமையான போட்டியை அளித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்கள், கோவை தெற்கு தொகுதியின் பல்வேறு இடங்களில் ஒட்டி உள்ள போஸ்டரில் கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் வைத்து இருப்பது போன்ற புகைப்படத்துடன் கோவை தெற்கில் மீண்டும் டார்ச் லைட் என ஒட்டப்பட்டு உள்ளதால் மீண்டும் கமல் கோவை தெற்கில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: