வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரியைச் சேர்ந்தவர் சசிகுமார்(31), வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காட்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சசிகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமியுடன் வெளியில் சென்ற சசிகுமார், உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது. மேலும் சிறுமியுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.
இதற்கிடையில் தான் செய்வது தவறு என உணர்ந்த சிறுமி, சசிகுமாருடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் கோபமடைந்த சசிகுமார், தன்னிடம் பேசாவிட்டால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். இதற்கிடையில் போக்சோ சட்டத்தில் கைதான சசிகுமாரை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு நேற்று உத்தரவிட்டார்.
