சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பட்டமளிப்பு விழா பதக்கங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதால் மாற்று உலோகங்களை பயன்படுத்த பல்கலைக்கழகங்கள் திட்டமிடுவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளில் புதிய சவால்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களின் தயாரிப்பு செலவு கடுமையாக உயர்ந்துள்ளதால், பல கல்வி நிறுவனங்கள் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொண்டு வருகின்றன. இதுவரை குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு வந்த தங்கப் பதக்கங்கள், தற்போது பல மடங்கு அதிக விலையில் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தங்கப்
பதக்கங்களின் விலை சுமார் 4 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், வெள்ளிப் பதக்கங்களின் விலையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
பொதுவாக, பட்டமளிப்பு விழாக்களில் வழங்கப்படும் தங்கப் பதக்கங்கள் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. வெள்ளி அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, அதன் மேல் குறைந்த அளவு 24 காரட் தங்கம் பூசப்பட்டிருக்கும். இருப்பினும், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு, தயாரிப்பு கட்டணம், பாலிஷ் செலவுகள் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் பதக்கங்களின் மொத்த செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்களில் பதக்கங்கள் தயாரிப்பதற்கான டெண்டர்களுக்கு போதிய நிறுவனங்கள் முன்வராத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் டெண்டர்கள் மீண்டும் வெளியிடப்படுவது, விழா ஏற்பாடுகள் தாமதமாவது போன்ற சிக்கல்கள் உருவாகியுள்ளன.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில்,’மாணவர்களின் சாதனையை அங்கீகரிக்கும் பதக்கங்களில் தரம் அல்லது மரியாதையில் எந்த சமரசமும் செய்ய முடியாது. எனவே, தங்கம் விலை உயர்வை பொருட்படுத்தாமல், கூடுதல் செலவுகளை ஏற்று பதக்கங்களை வழங்க பல்கலைக்கழகங்கள் முன்வருகின்றன. இருப்பினும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தால், எதிர்காலத்தில் பதக்கங்களின் எண்ணிக்கையை குறைப்பது, மாற்று உலோகங்களை பயன்படுத்துவது அல்லது செலவைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை ஆராய வேண்டிய சூழல் உருவாகலாம்’ என்றனர்.
