தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் இன்று (01.02.2026) திருவள்ளூர் மாவட்டம். ஆவடி வட்டம். அயப்பாக்கம் டி.என்.எச்.பி. பகுதியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்து, CSR பெருநிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதி திட்டம் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 41 துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் 399 துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர்களுக்கு கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கருவில் உள்ள குழந்தைகளின் இதயத்துடிப்பை கண்டறியும் டாப்லர் கருவியினை வழங்கினார்கள்.

பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
642 புதிய துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைத்தல்;
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் அடித்தளமாக விளங்குவது துணை சுகாதார நிலையங்கள். இத்தகைய துணை சுகாதார நிலையங்கள் கிராமங்கள் குறிப்பாக மலைப்பகுதிகளில் நோய்த்தடுப்புகள், நலம் காப்பது. அடிப்படை சிகிச்சைகள் வழங்குவதற்கு துணை சுகாதார நிலையங்கள் மிக முக்கிய அளவில் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன. 5000 மக்கள் தொகை கொண்ட கிராமத்திற்கு துணை சுகாதார நிலையங்கள் என்றும் மலைப்பகுகளில் 3000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்றும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை உள்ள துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 8,713. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்கள் தொகைக்கு ஏற்ப எங்கெங்கு துணை சுகாதார நிலையங்கள் அமையப் பெற வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தி அதன்மூலம் இன்று 642 இடங்களில் புதிய துணை சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அந்தவகையில் இன்று 642 புதிய துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 41 இடங்களில் புதிய துணை சுகாதார நிலையங்கள் உருவாக்கப்படவிருக்கிறது. அந்தவகையில் இன்று அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் துணை சுகாதார நிலையங்கள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

ரூ.359.46 கோடி மதிப்பீட்டில் 42 புதிய மருத்துவக் கட்டமைப்புகளை திறந்து வைத்தல்;
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு. 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள். 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிதாக ரூ.1,078 கோடி மதிப்பீட்டில் 19 இடங்களில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 4 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு. திருத்தணி போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகள் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 06.02.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, இராஜபாளையம், அருப்புக்கோட்டை, குளித்தலை, காங்கேயம், திண்டிவனம் ஆகிய 7 இடங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரூ.229.24 கோடி மதிப்பீட்டிலான புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளை திறந்து வைக்கப்பட உள்ளார்கள். அதேபோல் ரூ.104 கோடி செலவில் கட்டப்பட்ட 23 இடங்களில் மருத்துவக் கட்டமைப்பு திறந்து வைக்கப்பட உள்ளது. அதில் ஒன்று இந்த மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை. அதோடுமட்டுமல்லாமல் ரூ.11.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட உள்ளது. இதனையும்தாண்டி சென்னை கிண்டியில் ஒரு உணவு பகுப்பாய்வு கூடத்தில் நுண்ணுயிரியியல் ஆய்வகம், அதேபோல் மதுரையில் ஒரு நுண்ணுயிரியல் ஆய்வகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட உள்ளது. ஆக தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 06.02.2026 அன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ரூ.359.46 கோடி மதிப்பீட்டிலான 42 புதிய மருத்துவக் கட்டமைப்புகளை திறந்து வைக்க இருக்கிறார்கள். மருத்துவத்துறை வரலாற்றில் இது மிகப் பெரிய சாதனையாக அமையும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்;
தமிழ்நாடு முதலமைச்சர் 02.08.2025 அன்று ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 என்கின்ற வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 என்கின்ற வகையிலும், 10 இலட்சத்திற்கும் மேற்கொண்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 என்கின்ற வகையிலும், 10 இலட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 என்கின்ற வகையிலும் 1.256 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் என்று அறிவிக்கப்பட்டது. முழு உடற்பரிசோதனை என்கின்ற வகையில் 1,256 முகாம்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாதவகையில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் இந்த திட்டம் தொடங்கப்பட்டு, நேற்று (31.01.2026) மாலை வரை 1,178 முடிவுற்று 16,74,161 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். இதுபோன்று பல்வேறு சிறப்புமிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று 642 புதிய துணை சுகாதார நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் போராட்டம் தொடர்பான கேள்விக்கு;
மருத்துவர்களின் போராட்டம் என்பது அவர்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை சுமார் 40க்கும் மேற்பட்ட முறையில் அவர்களுடன் கடந்த 4.5 ஆண்டுகளில் பேச்சுவார்த்தை நடத்தி ஏராளமான சலுகைகளை வழங்கி இருக்கிறோம். அண்மையில் மதுரையில் ஒரு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா மதுரையில் நடத்தப்பட்டது. தற்போது போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களையும் அழைத்து பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஆதிச்சநல்லூர் பெருமையை உணர்த்த மையம் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு;
ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் பொருநை ஆற்றங்கரையில் மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டின் பெருமையை உலகளில் அறிந்திடும் வகையில் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே இரும்பின் பயன்பாடு 5200 வருடங்களுக்கு முன்பானது. அரிசியின் பயன்பாடு 3200 வருடங்களுக்கு முன்பானது. நகர நாகரிகம் 4000 வருடங்களுக்கு முன்பானது போன்ற ஏராளமான விஷயங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வெளி உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு உறுதுணையாக ஒன்றிய அரசு இருந்தாலே போதுமானது.

மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது தொடர்பான
கேள்விக்கு;
இது மகிழ்ச்சிதான். அதேநேரத்தில் உயர்கல்வி சேர்க்கை என்பது இந்தியாவிலேயே அதிக அளவில் இருப்பது தமிழ்நாட்டில்தான். 28.4% என்பது இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கை. தமிழ்நாட்டில் 47%. இந்த சதவிகிதத்திற்கு என்ன காரணம் என்றால் முதலமைச்சர் தமிழ்நாட்டில் புதுமைப்பெண் என்கின்ற திட்டமும். தமிழ்ப்புதல்வன் என்கின்ற திட்டத்தின் மூலமும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- தருகின்ற திட்டமும் ஒரு காரணம். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 12 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதேபோல் நான் முதல்வன் எனும் திட்டத்தின்மூலம் திறன் கல்வி பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்குவதன் மூலமாகவும் 42 இலட்சம் பேர் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் 7.5% இடஒதுக்கீடு மூலம் மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம், மீன்வளம் போன்ற பல்வேறு துறைகளுக்கு 7,5% இடஒதுக்கீடு தந்து இதுபோன்ற செயல்படுத்திக் கொண்டிருக்கும் காரணத்தினால்தான் இன்று அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை என்பது 47% ஆக உயர்ந்திருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இதற்கான உதவிகளை ஒன்றிய அரசு செய்தால் இதைவிட கூடுதலான அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் சட்டமன்ற உறுப்பினர்கள் க.கணபதி (மதுரவாயல்), துரை சந்திரசேகர் (பொன்னேரி), பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.எ.சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் மரு.சம்பத். இணை இயக்குநர் (மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள்) மரு.அம்பிகா சண்முகம், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.பி.பிரியா ராஜ்(திருவள்ளூர்), மரு.ஜெ.பிரபாகரன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மோகன் காந்தி, அயப்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் வீரமணி மற்றும் மருத்துவர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Related Stories: