கடலூர்: காரும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள ம.புடையூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் தனியார் வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்கள் கல்லூரியில் பணி புரியும் உதவி பேராசிரியர் ரகுநாத் என்பவரின் காரை எடுத்துக் கொண்டு இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடிக்கு சென்று அங்குள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துவிட்டு மீண்டும் கல்லூரிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ராமநத்தத்தை அடுத்துள்ள எழுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியன் மீது மோதி அதை தாண்டி எதிர் திசையில் தாறுமாறாக சென்றது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் கார் நொறுங்கி அதில் பயணம் செய்த மாணவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி அலறி துடித்தனர். இந்த விபத்தில் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மாதவன் மகன் தரணி செல்வன் (20), திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை மகன் விநாயகம் (19), கடலூரை சேர்ந்த கண்ணன் மகன் ரிஷ்வந்த் (19) ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் மகன் ராகேஷ் (18), திருச்சியை சேர்ந்த சிவமுருகன் மகன் மதுபிரியன் (19), திருவண்ணாமலையை சேர்ந்த பிரேம்நாத் மகன் சசிகுமார் (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விபத்து நடந்த இடத்தின் அருகில் தான் சில மாதங்களுக்கு முன்பு 9 பேர் விபத்தில் இறந்தனர்.
