கோமா: கிழக்கு காங்கோவில் கடந்த சில நாட்கள் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ருபாயா நகரத்தில் எம்23 என்ற போராட்ட அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தாது சுரங்கத்திற்குள் கடந்த புதனன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுரங்கங்கள் இடிந்து விழுந்தன. இதில் சுமார் 200 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் சுரங்கத்திற்குள் உள்ள சேற்றுக்குள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள கோமா நகரத்தில் ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதனிடையே சுரங்க பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுரங்கத்திற்கு அருகில் தங்கி இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுரங்கப்பாதைகள் கைகளால் தோண்டப்பட்டு பராமரிப்பு இன்றி விடப்படுவதால் மீண்டும் மீண்டும் சரிவு ஏற்படுகின்றது. மேலும் மக்கள் எந்த கட்டுப்பாடு அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி அனைத்து இடங்களிலும் தோண்டுகின்றனர். சுரங்கப் பாதைகள் இணையாக செல்வதால் நிலச்சரிவானது ஒரே நேரத்தில் பல இடங்களை பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.
