வாஷிங்டன்: 2026ம் ஆண்டிற்கான அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவை நிறைவேற்றுவதில் ஆளும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி எம்பிக்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருந்தது. சமீபத்தில் மினியாபோலிசில் குடிவரவுத்துறை அதிகாரிகளால் 2 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் அரசு புலனாய்வு அமைப்புகள் பொறுப்பேற்க சட்டம் இயற்றுவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டுமென ஜனநாயக கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு சமரசம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் அவையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி அரசின் பெரும்பாலான துறைகளுக்கு வரும் செப்டம்பர் வரை நிதி அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கான நிதி 2 வாரத்திற்கு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்த மசோதா பிரதிநிதிகள் அவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. எனவே அரசு நிர்வாகம் நீண்ட காலத்திற்கு முடங்கும் அபாயம் நீங்கி உள்ளது.
