சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘‘திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பின் தமிழக முதலமைச்சர் வடசென்னை வளர்ச்சியில் கொண்ட அக்கறை காரணமாக, அவர் தீட்டிய திட்டம் காரணமாக அன்று வடசென்னை பகுதியா என்று புருவத்தை உயர்த்தி பார்த்தவர்கள், இன்று நெற்றி சுருக்கத்தோடு வட சென்னை இத்தனை வளர்ச்சியோடு இருக்கிறது என்று பார்க்கிறார்கள். இந்த மாதம் 13ம் தேதிக்குள் இன்னும் மூன்று திருமண மண்டபங்கள் திறந்து வைக்க உள்ளார். அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் இந்த பேருந்து நிறுத்தங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’’ என்றார்.
குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு முடிவாக இந்த தேர்தல் இருக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு, ‘‘நரேந்திர மோடியை சந்திக்கும்போது எடப்பாடி பழனிசாமி ஏன் அவர் தன் மகனை அழைத்து கொண்டு சென்றார்’’ என கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணி வலுவாக இல்லை, தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு, ‘‘கூட்டணிக்கு கூவி கூவி அழைத்தது யார் என்று உங்களுக்கே தெரியும். நாங்கள் நிலையாக நிற்கிறோம்.
அண்ணா சொன்னது போல் நாங்கள் ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வைக்கிறோம் தமிழக முதலமைச்சர் அரசியல் ஞானம் பல தேர்தல்களை சந்தித்தவர். 60 ஆண்டு கால அரசியலை பார்த்தவர். எது எப்போது எப்படி கையாள வேண்டும் என்பதை கற்று அறிந்தவர். கூட்டணியை பற்றியோ, கூட்டணியை எப்படி அரவணைத்து செல்வது என்பது பற்றியோ தேர்தலை எப்படி நடத்துவது என்பது பற்றியோ யாரும் பாடம் எடுக்க வேண்டிய அளவுக்கு நாங்கள் இல்லை’’ என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சிஎம்டிஏ முதன்மை செயலாளர் பிரகாஷ், மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உடனிருந்தனர்.
