சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் தற்காலிக கொடி கம்பங்களை நடுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உரிய அனுமதி பெற வேண்டும் ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதிய சிலைகள்/ கொடி கம்பங்களை நிறுவுவதற்கு, ஏற்கனவே உள்ள சிலைகளை மாற்றுதல் மற்றும் இடமாற்றம் செய்தல் குறித்து விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் மண்டல உதவி ஆணையரை தலைவராக கொண்டு ஒரு மண்டலத்திற்கு ஒரு துணை குழு வீதம் 15 மண்டலங்களுக்கு 15 மண்டல அளவிலான துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் தனி நபர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள், நிகழ்வின் விவரங்களுடன் தற்காலிகமாக கொடி கம்பங்களை நிறுவுவதற்கு, நடத்தப்படும் நிகழ்வுக்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக, அமைக்கப்பட வேண்டிய தற்காலிக கொடி கம்பங்களின் எண்ணிக்கை, உயரம், இதற்கு பயன்படுத்தப்படும் பொருள், கொடி கம்பங்களுக்கு இடையிலான இடைவெளி தூரம், நிறுவப்படும் இடம் உள்ளிட்ட தகவலுடன் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டல அளவிலான துணை குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
தற்காலிக கொடி கம்பங்கள் தார்ச்சாலை மேற்பரப்பில் அமைக்க கூடாது. சாலையின் உள்ள எந்தவொரு கட்டமைப்புகளின் மீதும் (சாலை மையத்தடுப்பு, நடைபாதை, மழைநீர் வடிகால், கால்வாய், பாலங்கள், சுவர்கள், சாலைதளவாடங்கள் போன்றவை) தற்காலிக கொடி கம்பங்கள் வைத்திட அனுமதிக்கப்படாது. தற்காலிக கொடி கம்பத்தின் அதிகபட்ச உயரம் தரைமட்டத்திலிருந்து 3.50 மீட்டராக இருக்க வேண்டும். தரைமட்டத்திற்கு கீழே உள்ள ஆழம் ஒரு மீட்டர் (குறைந்தபட்சம்) இருக்கவேண்டும். தார் சாலையின் மேற்பரப்பில் இருந்து 1.5 மீட்டருக்கு மேல் உள்ள பகுதியில் துளைகள் துளையிடப்பட வேண்டும். சாலையோரங்களில் அமைக்கும் போது தற்காலிக கொடி கம்பங்கள் கண்டிப்பாக மின்சாரம் கடத்தாத வகையில் இருக்க வேண்டும். அமைப்பாளர்கள் / விண்ணப்பதாரர்கள் கொடி கம்பம் மின்சார கம்பிகளை தொடவோ அல்லது குறுக்கிடவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், விண்ணப்பதாரரே முழுப்பொறுப்பு. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களால் ஏற்படும் எந்தவொரு இழப்பையும் விண்ணப்பதாரரே ஏற்கவேண்டும். விபத்துகள் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கைஎடுக்கப்படும்.
பொது உள்கட்டமைப்பிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அனுமதி/ உரிமம் பெற்ற நபர், பொது இடங்களை சுத்தம் செய்து, துளைகளை நிரப்புவதன் மூலம் அதன் அசல் நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். கொடி கம்பங்களை நிறுவுவதற்கான வாடகையைத் தவிர, சம்பந்தப்பட்ட துறைக்கு சேதத்திற்காக செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்த வேண்டும். தற்காலிக கொடி கம்பங்களுக்கான வாடகை ஒரு கொடி கம்பத்திற்கு ஒரு நிகழ்விற்கு ரூ.10 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத நிகழ்வுகளை பொறுத்தவரை, கொடி கம்பங்களை நிறுவுவதற்கு அதிகபட்சமாக 7 நாட்கள் அவகாசம் அனுமதிக்கப்படும். அனுமதி காலம் முடிந்தவுடன், தற்காலிக கொடி கம்பங்களை அமைப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் உடனடியாக அகற்ற வேண்டும். ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் / சம்பந்தப்பட்ட துறையினர் கொடி கம்பங்களை அகற்றி, அதற்கான செலவை அமைப்பாளர்களிடமிருந்து வசூலிக்கும்.
கொடி கம்பங்களை நிறுவும் போது பொதுமக்களுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதனை மீறி நடப்படும் கொடி கம்பங்கள் அலுவலர்களால் அகற்றப்படுவதோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக சிலை, கொடி கம்பம் அமைக்க மாநகராட்சியின் இணையதளத்தில் (//chennaicorporation.gov.in/) விண்ணப்பிக்க வேண்டும். மதச்சார்பான நிகழ்வுகளுக்கு 7 நாட்களும், மதச்சார்பில்லாத நிகழ்வுகளுக்கு 3 நாட்களும் கொடி கம்பங்கள் நடுவதற்கு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பம் மாநகராட்சியின் மண்டல அளவிலான துணைக் குழுவின் பரிந்துரைக்காக அனுப்பப்படும். அதன் அடிப்படையில் ஆய்வுசெய்து கொடி கம்பங்கள் நடுவதற்கான அனுமதி அந்தந்த மண்டலங்களில் உள்ள தலைமைப் பொறுப்பாளரான துணை ஆணையர் (முதுநிலை) வழங்குவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
