சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 47 லட்சம் வாக்காளர்கள் இதுவரை விண்ணப்பம் செய்யவில்லை. தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்கிற எஸ்ஐஆர் பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை கொடுத்து அதனை பூர்த்தி செய்து பெற்றனர்.
இந்த படிவங்களில், கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர் இடம் பெற்றிருந்த சட்டசபை தொகுதிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த படிவத்தை, பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் நடந்த இந்த பணி, டிசம்பர் மாதம் 14-ந் தேதி நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக 18-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த எஸ்.ஐ.ஆர். பணி தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பின்பு வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 757 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். அதாவது சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் பேர் ஆகும். நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 45 ஆயிரம் பேர். இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் மற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது. நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் எனக்கூறி நீக்கப்பட்ட 66 லட்சத்து 45 ஆயிரம் பேரும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 6-ம் எண் படிவத்தை கொடுக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதற்கான கால அவகாசமும் வழங்கி சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆனால் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30-ந் தேதி(நேற்று) என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. மேலும், இந்த தேதிக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆக மொத்தம் சுமார் 22 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
ஆர்வம் காட்டாத 47 லட்சம் பேர்அப்படியென்றால் நீக்கப்பட்ட 66 லட்சத்து 45 ஆயிரம் பேரில் இப்போது, 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே மீண்டும் விண்ணப்பம் அளித்து இருக்கிறார்கள். சுமார் 47 லட்சம் பேர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆர்வம் இல்லாமல் மனு கொடுக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 22 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.
2.50 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர். தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 17ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களில் 47 லட்சம் பேர் மீண்டும் பெயரை சேர்க்க மனு அளிக்காதது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
