ரெட்டியார்சத்திரம், ஜன. 28: கொடைக்கானல் தாலுகா பெரியூர் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகள் பிரேமலதா (17). இவர் ஆத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கியிருந்து பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தந்தை முனீஸ்வரனுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீராமபுரம் அருகே குமாரபாளையத்தில் உள்ள வேகத்தடையில் அவர்கள் சென்ற டூவீலர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இதில் முனிஸ்வரன் லேசாய காயங்களுடன் தப்பினார். ஆனால் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த மாணவி பிரேமலதா, ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
