ரெட்டியார்சத்திரம், ஜன. 22: ரெட்டியார்சத்திரம் பகுதியில் பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தொல்காப்பியன், கிறிஸ்வின், மகாவிஷ்ணு, ஹரிபிரனேஷ், சந்தோஷ் குமார், சோமேஸ்வரன், நவீன்குமார், ரஞ்சித், விஷால்ரோஹித்பி ஆகியோர் கிராமப்புற வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி களப்பணியாற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ரெட்டியார்சத்திரத்தில் கிராம விரைவு ஊரக ஆய்வு முகாம் நடத்தினர். இதில் அந்த ஊரில் உள்ள வளங்களையும், அங்கு வசிக்கும் விவசாயிகளின் குறைகளையும் நேரடியாக கலந்தாய்வு மூலம் சேகரித்தனர். தொடர்ந்து விவசாயிகளுடன் களத்தில் நின்று தாங்கள் பெற்று கொண்ட அனுபவங்களையும் கலந்துரையாடினர்.
பின்னர் விவசாயம் செழிக்க வேண்டி பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் ஊரை மேம்படுத்தும் வகையில் பயிர் பட்டியல், பிரச்னை பகுப்பாய்வு மற்றும் அதன் தீர்வுகள் போன்ற வரைபடங்களை வரைந்து எடுத்துரைத்தனர். இதில் அப்பகுதி மக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
