தமிழக சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமலேயே வெளியேறினார். ஆளுநரின் இந்த செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் முயற்சி எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது. அதன்படி இந்தாண்டுக்கான தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக எம்எல்ஏக்கள் காலை 9 மணியில் இருந்து சட்டப்பேரவைக்கு வர தொடங்கினர். காலை 9.22 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவைக்கு வந்தார். அவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து இருக்கையில் அமர்ந்தார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காலை 9.27 மணிக்கு பேரவைக்கு வந்தார். இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் நடைபெறுவது மரபு. அதன்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வளாகத்திற்கு வந்தடைந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு மலர்க்கொத்து கொடுத்தும், கலைஞர் வரலாறு புத்தகத்தை கொடுத்து வரவேற்று சட்டப்பேரவை வளாகத்திற்கு அழைத்து வந்தார். சரியாக 9.30 மணி தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சரியாக காலை 9.31 மணி ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் உரையை படிக்க எழுந்தார்.

அவர் பேசிய போது, சபாநாயகர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று கூறினார். இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் உரையை படிக்காமல் சொந்தமாக சில கருத்துகளை பதிவு செய்தார். அப்போது, சட்டப்பேரவையில் தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்ற கருத்தை பதிவு செய்தார். ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்து பேசுகையில், தமிழக சட்டப்பேரவையில் முதலில் தமிழ் தாய் வாழ்த்தும், கூட்டம் முடியும் போது தேசிய கீதம் பாடப்படுவதும் தான் கடைபிடிக்கப்படும் மரபு. தயவு செய்து இந்த மரபை மாற்ற வேண்டாம். எனது அன்பான வேண்டுகோள் நீங்கள் ஆளுநர் உரையை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும், சபாநாயகர் அப்பாவும் தங்கள் விளக்கங்களை மாறி, மாறி பகிர்ந்து கொண்டனர். ஆனாலும், ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்து சரியாக 9.36 மணிக்கு பேரவையில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் அவர், 4வது ஆண்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அதிமுகவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் வெளியேறினர். இதே காரணத்தை தெரிவித்து பாஜவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் ஒரு முறை ஆளுநர் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியே சென்றுள்ளார்; வெளியே என்று சொல்வதைவிட, வெளியேறிச் சென்றிருக்கிறார். ஆளுநரின் செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல. இந்திய அரசமைப்புச் சட்டம் ஆர்டிக்கல் 176-ன்படி, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாகப் படிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இதில் ஆளுநர் தனது சொந்த கருத்துகளை தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து தெரிவிக்கும் ஆர்டிக்கல் 176-ல், தெளிவுரைகளைக் கேட்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும் நாம்
அவர் அவ்வாறு சில விளக்கங்களைக் குறிப்பிட்டு அரசுக்கு நேற்று கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவருக்கு அதற்கான பதிலும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆளுநர் வேண்டுமென்றே அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயலை செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை, அதன் மாட்சிமையை அவமதிக்கும் செயலாகும் என்றே நான் கருதுகிறேன். 10-4-2023 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கே நான் நினைவுகூர விரும்புகிறேன். \\”ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை” என்று அண்ணா கூறியபோதிலும், அதை கலைஞர் வழிமொழிந்தபோதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதல்வராக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை\\” என்று அன்றைக்கு நான் எடுத்துரைத்தேன். அந்தக் கொள்கையையொட்டியே நான் ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க ஆணையிட்டேன்.

எனினும், ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாடு சட்டமன்றம், எட்டரைக் கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற மாமன்றம். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். மக்களுடைய பேராதரவோடு, பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டமும் அந்தப் பதவி வகிப்பவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் நம்முடைய ஆளுநர் அதற்கு மாறாகச் செயல்படுகிறார். மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது மேடைகளில் அரசியல் பேசியும் அவதூறு பரப்பிவருகிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். எனினும், அத்தகைய ஒரு முயற்சியை இங்கும் செய்ய அவர் முனைவது ஏற்புடையதல்ல. நூற்றாண்டு விழா கொண்டாடி, சீரோடும், சிறப்போடும் இயங்குகின்ற இப்பேரவையின் புகழ் மங்கிடாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தினைப் பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

வரலாற்றுப் பெருமை கொண்ட இப்பேரவையின் மாண்பினைப் பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ள காரணத்தால், கீழ்க்காணும் தீர்மானத்தை பேரவைத் தலைவரின் இசைவோடு, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, முன்மொழிந்திட அனுமதி கோருகிறேன். ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையைப் பேரவையில் படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளதை இப்பேரவை ஏற்கவில்லை. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட, சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே ஆளுநரால் படிக்கப்பட்டதாக இப்பேரவைக் கருதுகிறது. அவ்வாறே அவைக் குறிப்பில் நடவடிக்கைக் குறிப்புகள் இடம் பெறலாம்.

மேலும், மரபுவழி நிகழ்வுகள், பேரவைத் தலைவரால் படிக்கப்பெறவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம், அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம் பெறலாம் என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்\\” இவ்வாறு தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தந்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது: இந்தச் சட்டமன்றத்தின் மாண்பைக் காத்து, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும், அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் முரண்டு பிடிப்பதும் தொடர்ந்து வருவது நல்லதல்ல. ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடைஞ்சலாக இருந்து இப்படி செயல்படுவது இங்கு மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஒரு நாள் செய்தியாக இதனை கடந்துவிட முடியாது. ஆண்டின் தொடக்கத்தில் அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநர் முறையாக வாசிப்பது நடைமுறை.

அந்த நடைமுறையை ஒருவர் தொடர்ந்து மீறும்போது அதுபோன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டுமென்ற கேள்வி சாதாரணமாகவே அனைவரின் மனதிலும் எழும். எனவே, ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு இந்திய நாடாளுமன்றத்தில் திமுக முன்னெடுக்கும் என்ற உறுதியையும் இந்த மாமன்றத்தில் அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தமிழில் கவர்னர் உரையை படிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து 9.49 மணிக்கு அவர் உரையை படித்து முடித்தார். பின்னர் தேசியக்கீதம் இசைக்கப்பட்டு 10.50 மணிக்கு கூட்டம் முடிந்தது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு போன்றவற்றால் சட்டசபை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: