புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 529 மனுக்கள் குவிந்தன

புதுக்கோட்டை, ஜன.6: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் மாவட்ட பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 529 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமாருக்கு பரிசு கோப்பையினை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முத்துச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: