* கூட்டணி முடிவாகாததால் அதிமுகவினரையும் மேடை ஏற்ற மறுப்பு
* அதிமுகவுக்கு பலம் வாய்ந்த தொகுதிகளில் 60 சீட் கேட்கும் பாஜக
திருச்சி: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு பலம் வாய்ந்த 60 முக்கிய தொகுதிகளை பாஜ கேட்டு அடம் பிடிப்பதாலும், ஓபிஎஸ், டிடிவியை மீண்டும் அதிமுகவில் சேர்க்கச் சொல்லி பாஜ வலியுறுத்துவதாலும், திருச்சியில், இன்று அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டணி பேச்சு முடியும்வரை எடப்பாடியை அமித்ஷா சந்திப்பை தவிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மதியம் ராணுவ விமானம் மூலம் திருச்சி வந்தார்.
மாலையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு அவர் நேற்றிரவு மீண்டும் திருச்சி வந்து, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக போட்டியிட விரும்பும் 60 தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்க, தமிழக பாஜ நிர்வாகிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டார். அதன்படி, பாஜ நிர்வாகிகளும் எடப்பாடியிடம் இந்த பட்டியலை அளித்தனர். பாஜ கேட்கும் 60 தொகுதிகளும் அதிமுகவுக்கு பலம் வாய்ந்த முக்கிய தொகுதிகளாகும். இதனால் எடப்பாடி அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அமித் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அவசர அவசரமாக அவர் திருச்சிக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப.குமார் உள்ளிட்ட சிலர் நேற்று இரவு தனியார் ஓட்டலுக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்களுடன் ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையின்போது, பாஜ கேட்ட 60 தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா கறாராக கூறிவிட்டாராம்.
இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை திருச்சியில் சந்தித்து சமாதானப்படுத்த நினைத்தாராம். ஆனால், 60 சீட்டுக்கு ஒப்புக் கொள்வதாக இருந்தால் சந்திக்கிறேன் என்று அமித் ஷா மீண்டும் கறாராக சொல்லிவிட்டாராம் இதனால் ஏமாற்றமடைந்த எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு கிளம்பி சென்று விட்டாராம். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க வேண்டும். அமமுகவை கூட்டணியில் இணைக்க வேண்டும். பாமக, தேமுதிகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும். ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்று அமித்ஷா அவர்களிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லை.
மேலும் அவர்களை கட்சியில் சேர்க்கச் சொல்லி பாஜ அழுத்தம் ெகாடுத்து வருகிறது. 2 பேரையும் கட்சியில் சேர்க்க முடியாது என்று அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார். சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஓபிஎஸ், அமித்ஷாவிடம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க கூடாது. அப்படி முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அதிமுகவின் பொது செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை அமித்ஷா நிராகரித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தரப்பினர் தவெக கூட்டணிக்கு செல்ல முடிவு செய்தனர். இதையறிந்த அமித்ஷா அவர்களை மீண்டும் பாஜ கூட்டணிக்கு அழைத்து வரும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதிமுகவுக்கு பலம் வாய்ந்த தொகுதிகளில் 60 சீட்களை பெறுவது, ஓபிஎஸ், டிடிவியை மீண்டும் இணைப்பது என்ற முடிவில் அமித் ஷா உறுதியாக இருப்பதால், எடப்பாடி, அமித்ஷாவுடனான சந்திப்பை இன்று தவிர்த்து விட்டார் என்றார்.
எஸ்.பி.வேலுமணிக்கு மிரட்டல் விடுத்த அமித்ஷா
திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்றிரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜவுக்கு 60 சீட் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதில் பின்வாங்க மாட்டோம். நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என்றால் உங்கள் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் தூசு தட்டுவோம். எங்களை நீங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்.
நாங்கள் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் நினைத்தால் உங்கள் கட்சியில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். செய்யவா.. செய்யவா… என்று தனது விரலை நீட்டியவாறு கோபத்துடன் அமித்ஷா எச்சரிக்கை விடுத்து மிரட்டும்தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. நான் சொல்வதை நீங்கள்(அதிமுக) கேட்டு தான் நடக்க வேண்டும் என்று கூறி எஸ்.பி.வேலுமணியை லெப்ட் ரைட் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
