விவசாயியை அடித்துக்கொன்று கிணற்றில் சடலம் வீச்சு ரத்த காயங்களுடன் அரைநிர்வாணமாக மீட்பு ஆரணி அருகே காணாமல்போன

ஆரணி, டிச. 30: ஆரணி அருகே மாயமான விவசாயி காயங்களுடன் அரைநிர்வாண நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை அடித்து கொன்று கிணற்றில் சடலத்தை வீசி சென்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் அருகே அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் ரத்த காயத்துடன் அரைநிர்வாண நிலையில் சடலமாக நேற்று காலை மிதந்து கிடந்தார். அவ்வழியாக நிலத்திற்கு சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சடலத்தை கண்டு அதிர்ச்சிடைந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் போலீசார் ஆரணி தீயணைப்பு துறையினரை வரவழைத்து கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலையின் மகன் மகன் டெல்லி(46) என்பதும் அவரது நிலத்தில் விவசாயம் செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த சில நாட்களாக விவசாய நிலத்திற்கு சென்று மது குடித்துக் கொண்டு திருநங்கைகளோடு வெளியூர்களுக்கு சென்று இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவது வழக்கமாக வைத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அதேபோல், கடந்த 27ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற டில்லி, மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த டில்லியின் அண்ணன் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்த நிலையில், நேற்று காலை தலையில் ரத்த காயத்துடன் கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் டெல்லியின் அண்ணன் ஆனந்தன் நேற்று கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டில்லி கிணற்றில் துணி துவைக்க சென்றபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தலையில் காயம் இருப்பதால் அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: