×

தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது அதிமுகவும், பாஜவும் களத்துக்கே வராததுதான் சந்தேகமாக உள்ளது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

* ஒரே ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது அதிமுகவும்-பாஜவும் களத்துக்கே வராதது தான் சந்தேகமாக உள்ளது என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் ஒரே ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடந்தது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, இளைஞரணிச் செயலாளர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.

இடம் பெயர்ந்தவர்கள் என்று மட்டும் சுமார் 66 லட்சம் பேரை நீக்கியிருக்கிறார்கள். எஸ்ஐஆர் பணிகளை அவசர கதியில ஆரம்பித்த போதே-இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்; தகுதியான தமிழ்நாட்டு வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என முன்கூட்டியே எச்சரித்தோம். உச்சநீதிமன்றத்திலேயும் வழக்கு தொடுத்திருக்கிறோம். மாநில-மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, தொகுதிப் பார்வையாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள்-பிஎல்ஏ-பிடிஏ-பிஎல்சி- சார்பு அணியினர் என, ஒவ்வொருவரும் பம்பரமாக உழைத்தீர்கள். அதிமுகவும் பாஜவும் களத்துக்கே வரவில்லை.

துரும்பை கூட கிள்ளி போடவில்லை. அதனால் தான், நாம் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. எனவே, நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும். 168 தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இதை நாம் வாக்குச்சாவடி வாரியாக பார்க்க வேண்டும்.

உதாரணமாக கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல் வாக்குச்சாவடியில் 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். நீக்கப்பட்ட அந்த 40 பேர்களில், 4 பேர் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலமாக சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல, மத்த 3 பேரையும் எதற்காக நீக்கியுள்ளார்கள் என்று சரி பார்க்க வேண்டும். நாம் இவ்வளவு கவனமாக இருந்தும்-ஒரே வாக்குச்சாவடியில், ஓரணியில் தமிழ்நாட்டில் இணைந்த 4 பேர் விடுபட்டிருக்கிறார்கள் என்றால் நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்.

அடுத்து நம்முடைய பணி, இவர்கள் இறந்துவிட்டார்களா, இடம் மாறிவிட்டார்களா, டபுள் எண்ட்ரியா என சரிபார்க்க வேண்டும். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட ஃபார்ம்-6 நிரப்பிக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். நானே இவ்வளவு மைக்ரோ அளவில் பார்க்கிறேன் என்றால் நீங்க எல்லாரும் இதனை எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என புரிந்து கொள்ள வேண்டும். கவனமாக பார்த்து சரி செய்ய வேண்டியது-ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் -தொகுதி பார்வையாளர்கள் பொறுப்பு.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டவர்கள் பட்டியலும் அதில் யாரெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் என்ற விவரமும் நாளைக்குள் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விவரங்களை முழுமையாக சரிபார்த்து விடுபடல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிஎல்2-களும், பிஎல்சி-களும் படிவங்களை சரியாக பயன்படுத்தி, சேர்த்தல்-நீக்குதல் செய்வதை நீங்கள் மேற்பார்வையிட வேண்டும். நான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்ப்பது போலவே நீங்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அடுத்ததாக புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். போலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுக்க இருந்த வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கை, 68 ஆயிரத்து 467-ல் இருந்து, 75 ஆயிரத்து 32 ஆகியிருக்கிறது. பூத் எண் மட்டும் மாறியிருக்கும் வாக்குச்சாவடிகளுக்கு, ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கும் பிஎல்ஏ-2க்கள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகள் அனைத்துக்கும் புதிய பிஎல்ஏ-2 மற்றும் பிஎல்சி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். நம்மை நேர்மையாக-நேர்வழியில் வீழ்த்த முடியாத பாசிச சக்திகளும்-எதிரிகளும், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். அதற்கு நாம் கடுகளவுகூட இடம் தரக்கூடாது.  நம் கவனத்தை திசை திருப்பவும்-நம்முடைய உழைப்பை வீணாக்கவும் எதிரிகள் கூட்டமும், வீணர்கள் கூட்டமும் முயற்சி செய்வார்கள். அதையெல்லாம் புறந்தள்ளி, தேர்தல் பணி ஆற்றுங்கள்.

வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ-அசதியோ கூடாது. இனிமேல்தான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓட வேண்டும். களத்தில் நாம் தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணி தான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரைக்கும் கவனம் சிதறாமல் உழையுங்கள், உழையுங்கள். டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடே வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,BJP ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,DMK ,Chennai ,DMK district… ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...