சென்னை: சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) தலைவர் சண்முகம், செயலாளர், வைரவன் ஆகியோர் கூட்டாக பேசியதாவது: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது புத்தக கண்காட்சி ஜனவரி 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த புத்தக கண்காட்சி ஜன.8ம் தேதி முதல் ஜன.21ம் தேதி வரை 14 நாட்களுக்கு நடத்த உள்ளோம். இந்த கண்காட்சி தினசரி காலை 11 முதல் இரவு 8.30 மணி நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருது மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் இந்த ஆண்டும் 6 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
அதன்படி, கவிதை – கவிஞர் சுகுமார், சிறுகதை – ஆதவன் தீட்சண்யா, நாவல் – முருகன், உரைநடை – பேராசிரியர் பாரதி புத்திரன், நாடகம் – கருணா பிரசாத் மற்றும் மொழிபெயர்ப்பு – வ.கீதா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு விதமான புதிய புத்தகங்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கதை சொல்லுதல், எழுதுதல், வார்த்தை விளையாட்டு போன்றவற்றை இந்த முறை புதிதாக ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும், வாசகர்களுக்கான குடிநீர், கழிப்பறை மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறோம். புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் என்று இருந்ததை மாற்றி இலவச அனுமதி வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். புத்தக திருவிழாவின் 14 நாட்களும் சிறந்த பேச்சாளர்கள், நிபுணர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. உலக அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்களான பென்குயின் ரெண்டம் ஹவுஸ் இந்தியா, பிரிட்டிஷ் கவுன்சில், HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON & SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது.
மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும் தமிழ் பதிப்பகங்களுக்கு அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருநங்கையர்களால் நடத்தப்பட்டு வரும் Queer Publishing House நிறுவனத்திற்கும் பிரத்யோகமாக அரங்கம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்தும் தமிழ் புத்தக விற்பனையாளர்கள் வருகை தருகிறார்கள். அதேபோல், தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள். இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது. இவ்வாறு பேசினர்.
