மயிலாடுதுறையில் காஸ் சிலிண்டர் கசிவால் வீட்டில் தீ விபத்து

மயிலாடுதுறை, டிச.16: மயிலாடுதுறை திருவிழந்தூரில் வீட்டில் காஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை, மகள் ஆகிய மூன்று பேர் லேசான தீக்காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை திருவிழந்தூர் பெருமாள் கோயில் தெரு, ரஹமத் காம்ப்ளக்ஸில் 15 வீடுகள் உள்ளது. இதில் குடியிருந்து வரும் முருகானந்தம் என்பவர் வீட்டில் கேஸ் கசிவால் காலை பயங்கர வெடி சத்தம் ஏற்பட்டுள்ளது.

இதில் வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறி உள்ளன. வீட்டிலிருந்த முருகானந்தம்(40), அவரது மனைவி சரஸ்வதி (35), மகள் சந்தியா (17) ஆகிய மூன்று பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்ததில் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் காஸ் பரவியுள்ளது. வீட்டில் இருந்த முருகானந்தம் மகன் சந்தோஷ் (15) திடீரென மின்ஸ்விட்சை ஆன் செய்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் தீபிடித்தது.

உடனடியாக தீயணைப்பு துறையினர் கசிவு ஏற்பட்ட கேஸ் சிலிண்டரை அகற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: