திருவள்ளூர்: குத்தம்பாக்கத்தில் ரூ.425 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம் பொங்கலுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, 2019ல் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக குத்தம்பாக்கம் கிராமத்தில், வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, 5 லட்சம் சதுர அடியில் ரூ.427 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, 2021ல் துவக்கப்பட்டது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வடிவமைப்பு அடிப்படையில், இங்கு மற்ற பேருந்து நிலையங்களில் விடுபட்ட பணிகள் என காவல் நிலையம், பணிமனை, குளிர்சாதன வசதி பல்வேறு பணிகளுக்கு திட்ட மதிப்பு ரூ.427 கோடியாக திருத்தி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், ஓய்வு பெற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணைய சிறப்பு செயலாளர் ஜெயக்குமார், தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, குத்தம்பக்கம் பேருந்து நிலைய வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி ராஜ்குமார் உள்பட அதிகாரிகள், பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். மேலும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வில் வந்த தகவலின் பேரில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வருமென சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
