குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜன. 1 முதல் ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு ரத்து: சீன அரசு திட்டம்

பெய்ஜிங்: சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, ஆணுறை உள்பட கருத்தடை சாதனங்களுக்கு அதிக வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 1980ம் ஆண்டு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என சீன அரசு சட்டம் கொண்டு வந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்று கொண்டால் அரசு வழங்கும் சலுகைகள் மறுக்கப்பட்டன. அப்போது ஆணுறைகள், கருத்தடை சாதனங்கள், மருந்து பொருள்கள் ஆகியவற்றுக்கு வரி விலக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. 2015ம் ஆண்டு வரை நீடித்த இந்த சட்டத்தால் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து கடும் சரிவடைந்தது. அதன் காரணமாக கடந்த 2015ம் ஆண்டு ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என சட்டம் தளர்த்தப்பட்டது.

அப்போதும் குழந்தை பிறப்பு குறைந்த அளவிலேயே இருந்ததால், 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என கடந்த 2021ம் ஆண்டு சீனா அறிவித்தது. அப்போதும் எவ்வித பலனும் கிடைக்காமல், ஆண்டுதோறும் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனாவில் ஆணுறை, கருத்தடை சாதனங்கள், பொருள்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு ரத்து செய்யப்படுகிறது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், சீனாவில் ஆணுறை உள்பட கருத்தடை சாதனங்களுக்கு பெரும்பாலான பிற பொருள்களுக்கு விதிக்கப்படும் 13 சதவீத மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட உள்ளது.

கடந்த 33 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வரி விலக்கு ரத்து செய்யப்படுவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த வரி விதிப்பு குறித்து சீனாவின் சமூக ஊடகங்களில், ஆணுறையின் விலை உயர்த்தப்பட்டாலும், ஆணுறை வாங்குவதை விட குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளே அதிகரிக்கும் என கிண்டலாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும், கருத்தடை சாதனங்களின் வரியை உயர்த்துவது மக்களை திட்டமிடப்படாத கர்ப்பம், பாலியல் ரீதியான நோய்கள் பரவும் ஆபத்து போன்ற சுகாதார சிக்கல்கள் எழும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: