தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கழுத்தறுத்து கொன்ற அக்கா: காவல் நிலையத்தில் சரண்: பரபரப்பு வாக்குமூலம்

கடலூர்: கடலூரில் தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருமணமாகாத வாலிபரை கழுத்தறுத்து படுகொலை செய்த அக்கா போலீசில் சரணடந்து பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பிரசாத் (40). இவர் தற்போது அதே ஊரில் சுந்தரமூர்த்தி நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். நீதிமன்றத்தில் பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்ட நிலையில், பிரசாத்தும் அவரது தாயார் ராமதிலகம் (70) மட்டும் வசித்து வந்துள்ளனர். அவரது மூத்த சகோதரி சூர்யாவுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். பிரசாத்துக்கு திருமணம் ஆகாத நிலையில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனி அறையில் இருந்த பிரசாத், கழுத்து அறுபட்ட நிலையில் அறையில் இருந்து வெளியே ஓடி வந்து தனது தாயாரிடம் துண்டு கேட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்த, அவரது தாயார் ராமதிலகம் அழுது கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பிரசாத் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி தமிழ் இனியன் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பிரசாத்துக்கு பக்கத்தில் வீட்டில் வசித்து வந்தவர்களுடன் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. அவர்கள் யாரும் வீட்டில் இல்லாததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதற்கிடையே திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் பக்கத்தில் வாடகை வீட்டில் வசித்த கவிப்பிரியா (30) என்பவர் சரணடைந்தார். அவரிடம் எஸ்.பி ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கவிப்பிரியா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: கவிப்பிரியா திருப்பாதிரிப்புலியூர் அகில் நாயுடு தெருவில் வசித்து வருகிறார். இவர் பிரசாத் வீட்டின் அருகே வாடகைக்கு குடியிருக்கும் தனது தந்தை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், பிரசாத் கவிப்பிரியாவின் தங்கைக்கு கடந்த மூன்று நாட்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கவிப்பிரியாவிடம் தெரிவித்து கதறி அழுது உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிப்பிரியா நேற்று மதியம் பிரசாத்திடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து பிரசாத் கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளார். இதில் பிரசாத் உயிரிழந்தார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கவிப்பிரியாவின் கணவர் முத்து (35) தலைமறைவாகி உள்ளதால், இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முத்து மீது கஞ்சா உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: