கேரளாவில் பரபரப்பு; தலையில் கல்லால் அடித்து கல்லூரி மாணவி கொலை: ‘போதை’யில் காதலன் வெறிச்செயல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கல்லூரி மாணவி கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரது காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காலடி மலையாற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜு, ஷினி தம்பதி. இவர்களது மகள் சித்ரப்பிரியா (19), பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சி துறை படிப்பு படித்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சித்ரப்பிரியா பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து காலடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ரப்பிரியாவை தேடினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பரிசோதித்தபோது சித்ரப்பிரியா, ஒரு வாலிபரின் பைக்கில் செல்வது தெரியவந்தது. விசாரணையில் வாலிபர், சித்ரப்பிரியாவின் காதலன் அலன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பைக்கில் சித்ரப்பிரியாவை அழைத்து சென்றது உண்மை தான் என்றும், ஆனால் அவரை வீட்டில் கொண்டு விட்டதாகவும் அலன் கூறினார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் விடுவித்தனர்.

இதற்கிடையே நேற்றிரவு வீட்டில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சித்ரப்பிரியாவின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உடல் சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது. தலையின் பின்புறம் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் மீண்டும் காதலன் அலனை பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அப்போது, தான் குடிபோதையில் சித்ரப்பிரியாவை தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். இதையடுத்து காதலன் அலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: