லக்னோ: லக்னோவில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற பொறியாளரை, அவருடன் வசித்து வந்த பெண்ணும் இரு மகள்களும் சேர்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிரீன் சிட்டி பகுதியில், தனியார் நிறுவனத்தில் பொறியாளர் சூர்ய பிரதாப் சிங் (35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் ரத்னா (46) என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இவர்கள் ஒரே வீட்டில் ‘லிவ்இன்’ வாழ்க்கை நடத்தி வந்தனர்.
ரத்னாவுக்கு 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஒரே வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தனர். ரத்னாவுக்கும், சூர்ய பிரதாப் சிங்குக்கும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சூர்ய பிரதாப் சிங், 17 வயதுடைய ரத்னாவின் மூத்த மகளிடம் தவறான நோக்கத்துடன் பழகி வந்துள்ளார். அவ்வப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த ரத்னா தனது மகள்களுடன் இணைந்து சூர்ய பிரதாப் சிங்கை கீழே தள்ளிப் பிடித்துக்கொண்டு, சமையலறையில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமான முறையில் கொலை செய்தார். கொலை செய்த பின்னர் சுமார் 10 மணி நேரம் சடலத்துடனேயே வீட்டிலிருந்த அவர், நேற்று காலையில் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். அப்போது அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘என் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் கொன்றேன்’ என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து போலீசார், ரத்னா மற்றும் அவரது இரு மகள்களைக் கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, ‘பணத்திற்காகத் தனது மகனைப் பயன்படுத்திக்கொண்டு கொலை செய்துவிட்டனர்’ என்று உயிரிழந்தவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் மற்றொரு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
