எலக்ட்ரிக் பஸ், ஸ்கூட்டர் உற்பத்திக்கு தமிழக அரசுடன் வின்பாஸ்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது: 4,500 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம்

 

சென்னை: உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்ய கடந்த ஆண்டு நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆலையில் வின்பாஸ்ட் விஎப்6 மற்றும் விஎப்7 கார்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆலையை மேலும் விரிவுபடுத்தி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்க முடிவு செய்திருந்தது. வியட்நாம் தலைநகர் ஹனாயில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுடன் கையெழுத்தாகியுள்ளது. விரிவாக்கத்துக்காக ஏற்கெனவே உள்ள ஆலையை ஒட்டி 500 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து, மின் இணைப்பு, தண்ணீர் வசதி, சாலை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கான அனுமதிகளையும் வழங்கும். மேற்கண்ட ஆலை விரிவாக்கத்துக்காக ரூ.4,498 கோடியை வின்பாஸ்ட் முதலீடு செய்கிறது.

துவக்கத்தில் ஆண்டுக்கு 50,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் 1.5 லட்சம் உற்பத்தி திறன் கொண்டதாக மேம்படுத்தப்படும், என தெரிவித்துள்ளார். ‘‘இந்த வாய்ப்பு இந்தியாவில் தங்கள் நிறுவன வாகன உற்பத்தியை அதிகரிக்க உதவுவதோடு, புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்’’ என வின்பாஸ்ட் குழும ஆசிய தலைமை செயல் அதிகாரி பாம் ஷன் சவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் மின்சார கார்களை மேம்படுத்துவதற்கான வின்பாஸ்டின் அடுத்த கட்ட திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். மின்சார பேருந்து மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி திட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பசுமை போக்குவரத்து உத்திக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்’’ என்றார்.

Related Stories: