சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான பொதுத் தேர்தல் 2026 தொடர்பான அறிவிக்கை கடந்த மாதம்15ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் தொடர்பாக, 16 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்திற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் ஆணையராக சென்னை மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண் வாக்காளர்கள், 14,64,344 பெண் வாக்காளர்கள் மற்றும் 829 இதர பாலினத்தவர்கள் என மொத்தம் 28,30,936 வாக்காளர்களாக உள்ளனர். 4,079 வாக்குச்சாவடிகளும் மற்றும் 6 துணை வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 4,085 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 978 இடங்களில் இவ்வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் கீழ்காணும் முகவரியில் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்
அதன்படி ஆர்.கே.நகர் தேர்தல் பொதுப்பார்வையாளரான தேம்ஜென்வாபாங் ஆவோ, 89258 15411 செல்போன் எண்ணில் புகார் அளிக்கலாம், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம், எண்.266, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை 600081 என்ற முகவரியில் காலை 11.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பெரம்பூர் தொகுதியில் டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி, எண்.45, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி, சென்னை-600039 மதியம் 12.30 மணி முதல் மதியம் 1 மணி வரை புகார் அளிக்கலாம்.
கொளத்தூர், வில்லிவாக்கம் பொதுப் பார்வையாளராக விக்ரம் குமார், பொதுப் பார்வையாளராகவும், 89258 15413, செல்போன் எண்ணிற்கும், அறை எண்.215, திரு.வி.க. நகர், எழும்பூர் (தனி) தொகுதிக்கு ஜி.ஸ்.சஹோடா பொதுப் பார்வையாளராகவும், 89258 15415 எண்ணிற்கும், அறை எண் 210, ராயபுரம் தொகுதிக்கு நவீன் பொதுப் பார்வையாளராகவும், 89258 15417 அறை எண்.212, துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு தொகுதிக்கு சுதிர் பாரா பொதுப் பார்வையாளராகவும், 89258 15419 அறை எண்.112, அண்ணா நகர், விருகம்பாக்கம் தொகுதிக்கு பொதுப்பார்வையாளராக ரஞ்சித் குமார் சிங், 89258 15421, அறை எண் 111 புகார் அளிக்கலாம்.
மேலும் சைதாப்பேட்டை, தி.நகர் தொகுதிக்கு நான்சி சஹாய், 89258 15423 அறை எண் 110, மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக கன்ஷியாம் தோரி, செல்போன் எண் 89258 15425, அறை எண் 211, அரசு விருந்தினர் மாளிகை, வாலாஜா சாலை, சேப்பாக்கம், சென்னை-5 மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சாய்தள வசதி
மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், மாற்றுத் திறனாளிகள் சட்ட விதிகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுசம்பந்தமாக, முழுமையான விவரங்களுடன் மனுவாக தாக்கல் செய்யப்படும் என்றார். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்தள வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை செய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மனுவாக தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
