சென்னை: சென்னையை சேர்ந்த 14 பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர், கடந்த நவம்பர் 25ம்தேதி 6 நாள் சுற்றுலாவாக சென்னையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இலங்கை சென்றனர். அவர்கள், இலங்கை சென்ற 2 நாட்கள் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்ததால், எந்த இடத்தையும் சுற்றிப்பார்க்க முடியாமல் அங்கு முடங்கி கிடந்தனர்.
இந்நிலையில், மழையின் வேகம் அதிகரித்து, வெள்ளப்பெருக்கு, மண் சரிவு போன்ற பேராபத்துகள் நடக்கத் தொடங்கின. இதையடுத்து, இவர்கள் 29 பேரும் தங்கள் பயணத்தை பாதியில் முடித்துவிட்டு, விமானம் மூலம் சென்னை திரும்ப முடிவு செய்தனர். ஆனால், விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதால், இலங்கையிலேயே ஒரு கிராமப் பகுதியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு, அவர்களுக்கு சரியான உணவு போன்றவை கிடைக்காமல், பிஸ்கட்டுகளை சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
அந்த குழுவினர், தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கை காரணமாக, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கையின் முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டைமான், உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிகள் மேற்கொள்ள தொடங்கினர். அதன்பின்பு, அந்த தமிழக சுற்றுலா குழுவினர், பெண்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ், வீடுகள் போன்றவைகளில் தங்க வைத்து விட்டு ஆண்கள் அனைவரும், அவர்கள் சுற்றி பார்க்கச்சென்ற பேருந்துக்குள்ளேயே 2 நாட்கள் முடங்கி இருந்து தவித்தனர்.
இலங்கையில் மழை ஓய்ந்த பின்பு, அவர்கள் தங்கியிருந்த கிராம பகுதியில் இருந்து, கொழும்பு விமான நிலையத்திற்கு பேருந்தில் புறப்பட்டனர். ஆங்காங்கே மணல் சரிவு, பெரிய பாறைகள் உருண்டு சாலைகளில் கிடந்ததால், 2 மணி நேரத்தில் வரவேண்டிய அவர்கள் 14 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து, கொழும்பு விமான நிலையம் வந்தனர்.
இதற்கிடையே, கொழும்பிலிருந்து சென்னை வருவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட் செல்லாது, புதிதாக டிக்கெட் எடுக்க வேண்டுமென்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தூதரக அதிகாரிகள், செந்தில் தொண்டைமான் ஆகியோர் தலையிட்டு, இவர்களை ஏற்கனவே எடுக்கப்பட்ட டிக்கெட்களிலேயே சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, நேற்று காலை இலங்கையிலிருந்து, சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இந்த குழுவினர் சென்னை வந்து சேர்ந்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: இலங்கையில் பல்வேறு சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்ப்பதற்காக நாங்கள் 6 நாட்கள் பயணமாக, இலங்கை சென்றோம். ஆனால், அங்கு நாங்கள் சென்றதிலிருந்து பெரும் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டதால், நாங்கள் எந்த இடத்தையும் சுற்றிப்பார்க்காமல் திரும்பி வந்து விட்டோம்.
அதோடு, அங்கு நாங்கள் பெரும் அவதி அடைந்தோம். எங்கள் கண் எதிரே நிலச்சரிவு காரணமாக பெரிய கட்டிடங்கள் உடைந்து நொறுங்கி விழுவதை கண்ணால் பார்த்தோம். மனித உயிர்கள் பலியாவதையும் பார்த்து நடுங்கிக் கொண்டு இருந்தோம். எங்கள் குழுவில் இருந்த பெண்கள், குழந்தைகளை மட்டும் பாதுகாப்பாக தங்க வைத்துவிட்டு, ஆண்கள் நாங்கள், 2 நாட்கள் பயணித்த பேருந்துக்குள்ளேயே முடங்கி கிடந்தோம்.
அதன் பின்பு எங்கள் உறவினர்கள், தமிழ்நாடு முதல்வருக்கு தகவல் கொடுத்து, முதல்வர் எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, நாங்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வந்திருக்கிறோம். எனவே தமிழ்நாடு முதல்வருக்கு, எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
