×

பேசுவதை நிறுத்தியதால் கள்ளக்காதலி காருக்கு தீ வைத்த போலீஸ்காரர்

திருச்சி: திருச்சி ​சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் சங்கரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் புவனேஸ்வரி(42). ஆயுள் காப்பீட்டு நிறுவன ஏஜெண்ட். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் புவனேஸ்வரி மகன், மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வரி பல்வேறு பகுதிகளில் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து எல்ஐசி பாலிசிக்கு ஆள் சேர்த்து வந்துள்ளார். அப்போது அறிமுகமான கொள்ளிடம் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வரும் சத்தியராஜிடம்(40) எல்ஐசி பாலிசி எடுக்குமாறு கூறி புவனேஸ்வரி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் புவனேஸ்வரி சத்தியராஜிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அவர் போன் செய்தாலும் எடுக்கவில்லை. இதனால் புவனேஸ்வரி மீது, சத்தியராஜ் ஆத்திரத்தில் இருந்தார்.

​இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தியிருந்த புவனேஸ்வரியின் காருக்கு மர்ம நபர் தீ வைத்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சத்தியராஜ் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்து புவனேஸ்வரியின் கார் கண்ணாடியை உடைத்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றது பதிவாகியிருந்தது. புவனேஸ்வரியின் கார் தீப்பிடித்து எரிந்ததில் அருகில் இருந்த மற்றொருவரின் காரும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து சத்தியராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் நேற்று உத்தரவிட்டார்.

Tags : Trichy ,Bhubaneswari ,Trichy Samayapuram Number ,Tolgate Sankara ,
× RELATED இன்ஸ்டா வீடியோ கால் மூலம் நிர்வாணமாக...