×

கடும் வறட்சியால் கரும்பு, நெல், மணிலா கருகியது; மாடுகள் விட்டு மேய்ப்பு ; விவசாயிகள் வேதனை

கலசப்பாக்கம், ஜூலை 14: கலசப்பாக்கம் பகுதியில் கோடை முடிந்தும் கடும் வறட்சி தொடர்வதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததோடு கரும்பு, நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. நெல், கரும்பு, மணிலா மற்றும் மலர் வகைகளை இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் தனியார் ஆலைக்கு அனுப்பி வந்தனர். ஆனால் உரிய பணம் வராததால் இனிக்கும் கரும்பை சாகுபடி செய்த விவசாயிகளின் நிலை தற்போது கசப்பாக மாறியுள்ளது.

இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் ஏரி பாசனம், கிணற்று பாசனத்தை முழுமையாக நம்பியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக செய்யாற்றில் தண்ணீர் சென்றது. இதனால் ஆழ்துளை கிணறுகள் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் கடந்த 3 மாதங்களாக செய்யாற்றில் வறண்டு பாலைவனம் போல் உள்ளது. தற்போது கலசப்பாக்கம் வட்டத்தில் 900 எக்டேர் பரப்பளவிற்கு நெல் சாகுபடி செய்துள்ளனர். மேலும் 130 ஹெக்டேர் பரப்பளவு கரும்பு 250 ஹெக்டேர் பரப்பளவு மணிலா விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
வருண பகவான் கை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் விவசாய பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். தற்போது பெரும்பாலான இடங்களில் கரும்பு நெல் மணிலா பயிர்கள் கோடை வெப்பத்தில் கருகி மகசூல் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தொடர்ந்து இதேநிலை நீடித்தால் மணிலா மற்றும் கரும்பு முற்றிலுமாக மகசூல் பாதிக்கும். பல்வேறு பகுதிகளில் நடவு செய்த நெல் பயிர்கள் மற்றும் மணிலா பயிர்களை மாடுகளை விட்டு மேய்க்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் ஆடி 18 தொடர்ந்து விவசாய பணியில் விவசாயிகள் நெல்மணிகள் விதை விடுவது என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மும்முனை மின்சாரம் சீராக வழங்காததால் உரிய நேரத்தில் விவசாயிகள் விவசாய விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை எனக்கூறப்படுகிறது. விவசாய பம்பு செட்டுகளில் இரவு பகலாக காத்திருந்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சனையும் உருவாகியுள்ளது.

Tags : Manila ,Kalasapakkam ,Tiruvannamalai District Kalasapakkam Area ,
× RELATED ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில்...