×

ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில் மொபட்டில் சென்றபோது மொபட்டில் சென்றபோது வழிமறித்து தாயை தாக்கி மகளிடம் சில்மிஷம்: கஞ்சா போதை வாலிபருக்கு தர்ம அடி

 

ஆரணி, ஆக. 4: ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில் மொபட்டில் சென்றபோது வழிமறித்து தாயை தாக்கிவிட்டு மகளிடம் சில்மிஷம் செய்த கஞ்சா போதை வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு 42 வயது பெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 19வயது மகள் உள்ளார். இதில் அவரது மகள் ஆம்பூரில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தாய் அவரது மகள் இருவரும் நேற்றுமுன்தினம் மாலை ஆரணியில் உள்ள தியேட்டரில் ஜனநாயகன் திரைப்படம் பார்ப்பதற்காக மொபட்டில் ஆரணிக்கு வந்துள்ளனர். பின்னர் படம் பார்த்துவிட்டு இரவு 10 மணியளவில் தாய் தனது மகளுடன் மொபட்டில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது ஆரணி- சேத்துப்பட்டு சாலை ஆகாரம் கிராமத்தில் உள்ள கூட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவர்கள் ஓட்டி வந்த மொபட்டை வழிமறித்து நிறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் வாலிபரை எதற்காக வண்டியை மடக்கி பிரச்னை செய்கிறாய் என தட்டிக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தாயை கன்னத்தில் ஓங்கி அறைந்து, ஆபாசமாக பேசினாராம். தொடர்ந்து அவரது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம்.இதனால் கத்திகூச்சலிட்டு அழுதுள்ளார். இந்த பெண்ணின் சத்தத்தை கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது, அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் இளைஞர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்.

அப்போது அந்த வாலிபர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் படுகாயமடைந்த அந்த வாலிபரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘அவர் ஆரணி டவுன் பெரியார் நகர் மணியம்மை வீதியை சேர்ந்த ஐயப்பன் மகன் அபினேஷ்(22), என்பது தெரியவந்தது. இதுகுறித்து, கல்லூரி மாணவியின் தாய் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அபினேஷ்யை நேற்று கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட வாலிபர் ஏற்கனவே டவுன் பகுதியில் பைக் எரித்த வழக்கில் கைதாகி வெளியே வந்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக கைதான நபரின் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Tags : Democrat ,Arani ,Tiruvannamalai district ,
× RELATED மிருகண்டா அணையின் நீர் மட்டம் வெகுவாக...