வந்தவாசி, ஆக. 3: வந்தவாசி அருகே இளம் பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாச மெசேஜ் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அடிக்கடி வெவ்வேறு செல்போன் நம்பர்களில் இருந்து ஆபாச மெசேஜ் படத்துடன் வந்ததாம். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில் பல்வேறு எண்களிலிருந்து இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது, கொட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜ்குமார்(34) என்பது தெரிய வந்தது. அதனடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். கைதான ராஜ்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
