×

புதிய மின்மாற்றி அமைக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு; நிலப்பிரச்னையால் விவசாயி தீக்குளிக்க முயற்சி குறைந்த மின்னழுத்த பிரச்னையால் அவதி

திருவண்ணாமலை, ஜூலை 14: குறைந்த மின்னழுத்த பிரச்னையால் அவதி ஏற்படுவதால் புதிய மின்மாற்றியை அமைக்கக்கோரி திருவண்ணாமலையில் நேற்று குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய வேலைவாய்ப்பு, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 484 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் ேகாரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வந்தனா கார்க், 4 மாற்றுத்திறனாளிக்கு காலிபர் கருவி, 6 ேபருக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினார். மேலும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 7 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த இனாம் காரியந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்களுடைய கிராமத்தில் புதிய மின்மாற்றியை உடனடியாக அமைக்கவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

குறைந்த மின்னழுத்த பிரச்னையால், வீட்டு உபயோக மின்இணைப்புகளில் சிக்கல் ஏற்பட்டு அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இரவு நேரத்தில் கிராமமே இருளில் சிக்கித்தவிக்கிறது. எனவே, புதிய மின்மாற்றியை அமைத்து, குறைந்த மின்னழுத்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மின்மாற்றி அமைக்க தடை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த விவசாயி சந்திரன் என்பவர், தன்னுடைய நிலத்தை சிலர் மோசடியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சிப்பதாகவும், இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து, திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.உடனடியாக, அங்கிருந்த போலீசார் விரைந்துச் சென்று தடுத்து நிறுத்தினர். அதனால், தீக்குளிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், நிலபிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், படவேடு அடுத்த துரிஞ்சாபுரம், பெருமாள் பேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், சாலை வசதி கேட்டு மனு அளித்தனர். சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் இப்பகுதியில், பெரும்பாலான கிராம மக்கள் பயன்படுத்தும் இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அதனை சீரமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.அதேபோல் வேட்டவலம் பகுதியில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai Collector ,Vandana Garg… ,
× RELATED ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில்...