×

குந்தா அணையில் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு

*உடனடியாக அகற்ற கோரிக்கை

மஞ்சூர் : குந்தா அணையின் முகப்பு பகுதியில் ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் மற்றும் ஆகாய தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின் நிலையங்களில் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் குந்தா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின்சார நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின்சார உற்பத்திக்குபின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அனைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின்சார உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கப்பாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கப்பாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக குந்தா மற்றும் கெத்தை அணைகள் உள்ளது.

இந்த நிலையில் குந்தா, கெத்தை அணைகளை தூர்வாராததால் சேறு மற்றும் சகதிகள் நிறைந்துள்ளது. மேலும் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் கிடக்கும் செடி, கொடிகள், மரங்கள் அடித்து செல்லப்பட்டு அணைகளில் கலக்கிறது. இதனால் அணைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளது. குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பி விடுகிறது.

மேலும் சேறு, சகதிகளால் குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பால் கெத்தை மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க குந்தா அணையின் முகப்பு பகுதி மற்றும் அணையின் இரு புறங்களிலும் பல வகையான செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது.

மேலும் ஆகாய தாமரை செடிகளும் படர்ந்துள்ளது. செடி, கொடிகள், ஆகாய தாமரை போன்றவைகளால் சுரங்கப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே அணை முகப்பு பகுதி மற்றும் கரையோரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகள், ஆகாயதாமரைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kuntha Dam ,Kuntha ,Baikara ,Neelgiri District ,
× RELATED சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை...