×

ஏப்.21 முதல் 23ம் தேதி வரை கருத்துக்கணிப்புகளை காட்சிப்படுத்த தடை: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்பட எந்தவொரு விவரத்தையும் வரும் 21 முதல் 23ம் தேதி வரை 48 மணி நேரத்திற்கு காட்சிப்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அட்டவணையையும், கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 8 (எட்டு) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ம் தேதி அறிவித்தது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 126-ன் படி, எந்தவொரு தேர்தல் ஒரு வாக்குச்சாவடி பகுதியில் நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக உள்ள நாற்பத்தெட்டு மணிநேர காலத்தில் (அமைதிக்காலம்), தொலைக்காட்சி அல்லது அதுபோன்ற பிற சாதனங்கள் வாயிலாக தேர்தல் தொடர்பான எந்தவொரு விவரத்தையும் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதனால் ஏப்ரல் 21ம் தேதி மாலை 6 மணி முதல் 23ம் தேதி மாலை 6 மணி வரை தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் மற்றும் கேபிள் நெட்வொர்க்குகள், குறிப்பிடப்பட்ட காலத்தில் தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அல்லது தேர்தலின் முடிவை பாதிக்கக்கூடிய வகையில் அமைப்பாளர்கள், பங்கேற்பாளர்களின் கருத்துகள், வேண்டுகோள்கள் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது. இதில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதும் அடங்கும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 126ஏ-ன் கீழ், ஏப்ரல் 9ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குக் கருத்துக்கணிப்புகளை நடத்துவதும், அதன் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது. இப்பிரிவை மீறுவது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்குரிய குற்றமாகும். அனைத்து ஊடக நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களை அதன் சாராம்சம் குறையாமல் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Chief Electoral Commission ,Chennai ,Election Commission ,Tamil Nadu ,Assam ,Kerala ,Puducherry ,West ,
× RELATED திருமணம் ஆகாமலே கர்ப்பத்தை அறிவித்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி