புதுடெல்லி: அமெரிக்கா கைவிட்ட நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதில் முதல் முயற்சியாக இங்கிலாந்து தலைமையில் இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள்ஆலோசனை நடத்தி உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, எண்ணெய், எரிவாயு விநியோகத்தின் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் உலகளாவில் பெட்ரோல் விலைகள் அதிகரித்து பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடாவை உலகின் பிற பெருங்கடல்களுடன் இணைக்கும் இந்த குறுகிய ஜலசந்தியில் பிப்ரவரி 28ம் தேதி போர் தொடங்கியதிலிருந்து வர்த்தக கப்பல்கள் மீது 23 நேரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 11 கப்பல் பணியாளர்கள் பலியாகி உள்ளனர். இதனால் ஈரானின் அனுமதியின்றி எந்த வர்த்தக கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாத சூழல் உள்ளது.
இதற்கிடையே, ஒருமாதத்திற்கு மேலாக நீடிக்கும் ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது தங்கள் வேலையில்லை என்றும், அவ்வழியாக வரும் எண்ணெயை சார்ந்துள்ள நாடுகளே அதை கைப்பற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென திட்டவட்டமாக கூறி கைவிட்டார். ஏற்கனவே கடந்த சில நாட்களாக டிரம்ப் இதை கூறி வரும் நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான அமெரிக்காவுக்கு பெரிய பாதிப்பில்லை என்றாலும், அதை நம்பி உள்ள பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தடுமாறி வருகின்றன. இதனால், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 35 நாடுகள், ஜலசந்தியை தடுக்கும் தனது முயற்சிகளை ஈரான் நிறுத்த வேண்டும் என்று கோரியும், அந்த நீர்வழிப்பாதை வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான உரிய முயற்சிகளுக்குப் பங்களிப்பதாகவும் உறுதியளித்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
அதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பான முயற்சிகளின் முதல் படியாக இங்கிலாந்து தலைமையில் 60 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க இந்தியாவுக்கும் இங்கிலாந்து அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று வெளியுறவு செயலாளர் மிஸ்ரி பங்கேற்பார் என ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, செக்கியா, ருமேனியா, லிதுவேனியா, எஸ்டோனியா, லாட்வியா, சுலோவீனியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஈரான் போர் ஓய்ந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது எளிதானதாக இருக்காது என்றும், அதற்கு கடல்சார் தொழில்துறையுடனான கூட்டாண்மையுடன் ராணுவ பலம் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒருமித்த முயற்சிகள் தேவைப்படும் என்றும் கப்பல் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ராணுவ தளபதிகள் மட்டத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், அதற்கான அடுத்தடுத்த ஆலோசனைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும் இந்திய நண்பர்கள் கவலைப்பட தேவையில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், ‘‘எங்கள் இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர். கவலைப்பட வேண்டியதில்லை’’ என ஈரான் தூதரகம் கூறி உள்ளது. இதுவரை ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து 6 இந்திய கப்பல்கள் வந்துள்ளதாகவும் மேலும் அங்குள்ள இந்திய கப்பல்களை பாதுகாப்பாக கொண்டு வர ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெஸ்வால் நேற்று கூறி உள்ளார்.
ஈரானிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் பெற்று வரும் சீனா, ஐரோப்பிய நாடுகளுடனான ஆலோசனையில் பங்றே்கவில்லை. அதே சமயம் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் தொடர்பில் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் நேற்று கூறி உள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு மூல காரணமே அமெரிக்கா, இஸ்ரேலின் சட்டவிரோத ராணுவ நடவடிக்கை என அவர் கூறி உள்ளார்.
* அடுத்த 2-3 வாரங்கள் கடுமையாக தாக்குவோம்
ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், தனது பழைய அறிக்கைகளையே மீண்டும் மீண்டும் கூறினார். ஈரான் போரில் அமெரிக்கா விரும்பிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டு விட்டதாகவும், ஈரானை கற்காலத்திற்கு அனுப்பி விடுவோம் என்றும் மீண்டும் கூறி உள்ளார்.
அடுத்த 2 அல்லது 3 வாரத்தில் இப்போர் முடிவுக்கு வரும் என்றும், இந்த காலகட்டத்தில் கடுமையான தாக்குதல் நடத்துவோம் என்றும் மீண்டும் ஈரானை மிரட்டி உள்ளார். ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் எரிசக்தி நிலையங்களை தாக்குவோம் என கூறி உள்ளார். ஈரான் போர் விஷயத்தில் அமெரிக்க மக்கள் டிரம்ப் மீது கடும் அதிருப்தியில் உள்ளதால் இப்போரை நியாயப்படுத்தும் வகையில் மட்டுமே டிரம்பின் உரை இருந்தது. இப்போரில் அமெரிக்காவுக்கு உதவாத நேட்டோ நாடுகளையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
* அதிபர் டிரம்ப் பேச்சில் முரண்பாடு மேக்ரான்
அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்குமாறு ஈரானை மிரட்டுகிறார், அடுத்த நாளே அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்கிறார். இதுபோன்ற டிரம்பின் முரண்பாடான நிலைப்பாடுகளை கண்டித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ‘‘ஒவ்வொரு நாளும் நீங்கள் முரண்பட்டுக் கொள்ள முடியாது.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான எந்தவொரு ராணுவ முயற்சியையும் நடைமுறைக்கு ஒவ்வாதது. ஹார்முஸ் ஜலசந்தியை ராணுவ ரீதியாகப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை’’ என்று கூறினார்.
* அமெரிக்காவை எதிர்க்க 70 லட்சம் பேர் தயார்
ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ஒருவாரத்திற்கும் குறைவான காலத்தில் நாடு முழுவதும் பரவி வரும் சக்திவாய்ந்த தேசிய பிரசாரத்தின் மூலம் சுமார் 70 லட்சம் ஈரானியர்கள் முன்வந்து ஆயுதம் ஏந்தி தாய்நாட்டை பாதுகாக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்’’ என்றார்.
போரிடுவதில் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு ஓய்வுபெற்ற வீரர்களுக்கு ஈரான் அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், துணை ராணுவப் படையான புரட்சிகர காவல் படையின் தன்னார்வலர்களைக் கொண்ட பசிஜ் படை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் தங்கள் படையில் சேர்க்கத் தொடங்கியுள்ளது.
