×

ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய விமானச் சேவைகள் குறைப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இந்த ஆண்டு பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள புதிய கோடைகால அட்டவணையின்படி, மார்ச் 29 முதல் அக்டோபர் 24 வரையிலான காலகட்டத்தில் வாரத்திற்கு சுமார் 23,000 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படவுள்ளன.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த ஆண்டு வாரத்திற்கு 25,610 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 2,560 சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட ஒன்பது முக்கிய நிறுவனங்கள் இந்த புதிய அட்டவணையின் கீழ் வருகின்றன.

இந்த சேவை குறைப்பிற்கு முக்கிய காரணமாக வளைகுடா நாடுகளுடனான விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள முடக்கம் பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 28 அன்று ஈரானில் போர் பதற்றம் தொடங்கியதிலிருந்து, இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட வேண்டிய நான்கில் மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதாவது, திட்டமிடப்பட்டிருந்த 3,300 சேவைகளில் சுமார் 2,400 விமானங்கள் (72%) ரத்து செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகள் இந்திய சர்வதேசப் போக்குவரத்தில் பாதியைப் பங்களிப்பதாலும், இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் போன்ற நிறுவனங்களின் வருவாயில் பெரும் பகுதியை இந்த வழித்தடங்களே கொண்டிருப்பதாலும், இந்த ரத்து நடவடிக்கைகள் விமான நிறுவனங்களுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

விமான நிறுவனங்கள் தற்போது ஒருபுறம் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது; மறுபுறம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான எரிபொருள் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது.

இத்துடன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7% வரை சரிந்துள்ளதால், விமான குத்தகை, பராமரிப்பு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஊதியம் போன்ற டாலர் சார்ந்த செலவுகளும் அதிகரித்துள்ளன. இந்தச் செலவுகளை ஈடுகட்ட விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விதித்தாலும், அது ஒரு சிறிய அளவிலான நிவாரணத்தையே தருவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Tags : Indian Air Services ,Iran ,Middle East ,Directorate of Civil Aviation ,
× RELATED இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு என்பது...