×

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.10 குறைத்தது ஒன்றிய அரசு!

டெல்லி: உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி 3 ரூபாயாகவும், டீசல் மீதான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டு பூஜ்ஜியமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டீசல் ஏற்றுமதி மீதான வின்ட்ஃபால் வரி லிட்டருக்கு 21.5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழலில், இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரிக்குறைப்பு முடிவானது, கச்சா எண்ணெய் விலை உயர்வால் சந்தைப்படுத்துதலில் நஷ்டத்தைச் சந்தித்து வந்த எண்ணெய் நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை எண்ணெய் நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும். இதனுடன் சேர்த்து, விமான எரிபொருள் மீதான கூடுதல் சிறப்பு கலால் வரிக்கும் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வின்ட்ஃபால் வரி லிட்டருக்கு 29.5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவி வரும் வதந்திகளை ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் மறுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாகவும், விநியோகம் தடையின்றி சீராக நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்றும், எரிபொருளைத் தேக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : EU government ,Delhi ,
× RELATED சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில்...