×

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு என்பது வதந்தி: ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி விளக்கம்

டெல்லி: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி, ஊரடங்கு குறித்த தகவல்கள் தவறானவை என ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஊரடங்கு குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம், ஒன்றிய அரசின் பரிசீலனையில் ஊரடங்கு குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து ஹர்தீப் சிங் பூரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “உலகளாவிய சூழல் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் உள்ளது; எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான நிகழ்வுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

பிரதமரின் தலைமையின் கீழ், நாட்டிற்குள் எரிபொருள், ஆற்றல் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதை அரசாங்கம் உறுதி செய்து வருகிறது. எழக்கூடிய எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்.

உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியிலும் இந்தியா தனது மீள்திறனை கடந்த காலங்களில் நிரூபித்துள்ளது; இனிவரும் காலங்களிலும் நாங்கள் உரிய நேரத்தில், முன்கூட்டியே மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.

ஊரடங்கு குறித்துப் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் அடிப்படை அற்றவை ஆகும். அரசாங்க அளவில் அத்தகைய முன்மொழிவு எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இத்தகைய ஒரு காலகட்டத்தில், நாம் அனைவரும் அமைதியாகவும், பொறுப்புணர்வுடனும், ஒற்றுமையுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும்.

இதுபோன்ற ஒரு சூழலில், வதந்திகளைப் பரப்புவதும், தேவையற்ற அச்சச் சூழலை உருவாக்குவதும் பொறுப்பற்ற மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய செயலாகும்” என தெரிவித்துள்ளார்.

இதே போல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கொரோனா காலத்தைப் போன்று இந்தியாவில் மீண்டும் “லாக்டவுன்” வராது என தெரிவித்துள்ளார். “கொரோனா காலத்தைப் போன்று இந்தியாவில் மீண்டும் “லாக்டவுன்” வராது. மீண்டும் லாக்டவுன் வரும் என சில தலைவர்கள் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. அரசியலுக்காக லாக்டவுன் பற்றி பேசுவது கவலையளிக்கிறது. நாடு முழுவதும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது” என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

Tags : India ,EU ,Ministers ,Nirmala Sitharaman ,Hardeep Singh Puri ,Delhi ,Minister ,Union State ,
× RELATED வணிக,தொழில்துறை எல்.பி.ஜி. நுகர்வோர்...