×

பாதுகாப்பு படை தலைவரைத் தொடர்ந்து ஈரான் உளவு அமைச்சர் கொல்லப்பட்டார்: மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் கட்ஸ் அறிவிப்பு

துபாய்: ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் போர் 19வது நாளாக நேற்றும் நீடித்தது. இப்போரின் முதல் நாளான கடந்த மாதம் 28ம் தேதி, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நாசிர்ஜாதே, தேசியப் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி ஷம்கானி, முப்படைகளின் தலைமைத்தளபதி அப்தோல்ரஹீம் மவுசவி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் துருப்புகள் மீண்டும் ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 17ம் தேதி இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானி மற்றும் துணை ராணுவமான புரட்சிகர காவல் படையின் பசிஜ் பிரிவின் தலைவர் சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டனர். அயதுல்லா கமேனியால் நியமிக்கப்பட்டு அவருக்கு மிகவும் நெருக்கமான ஈரானின் 2ம்கட்ட தலைவராக இருந்தவர் லாரிஜானி. அவரது இழப்பு ஈரானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடியது. லாரிஜானியின் மரணத்தை ஈரான் அரசு நேற்று உறுதி செய்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது விடிய விடிய தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 3வது உயர்மட்ட அதிகாரியான உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று அறிவித்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘ஈரானில் நடத்தப்படும் தாக்குதலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதில் நேற்றிரவு ஈரான் உளவு அமைச்சர் காதிப் கொல்லப்பட்டுள்ளார். மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன’’ என்றார். ஆனால், காதிப்பை மரணத்தை ஈரான் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உயிரிழந்த பாதுகாப்பு தலைவர் லாரிஜானி மற்றும் பசிஜ் படைப்பிரிவின் தலைவர் சுலைமானி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து ஈரான் கொடியேந்தி இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், லாரிஜானி மரணத்திற்கு பழிவாங்கப்படும் என உறுதி அளித்த ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது கொத்து குண்டுகளை வீசி தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த ஏவுகணைகள், ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை முறியடித்து இலக்குகளை தகர்ப்பதற்கான அதிக வாய்ப்பைக் கொண்டிருப்பதுடன், ரேடார் கண்காணிப்பு அமைப்புகளையும் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டவை என ஈரான் புரட்சிகர காவல் படை கூறியது.

மேலும், சக்திவாய்ந்த கொரம்ஷா ஏவுகணை ஏவியதாகவும், ஆர்-4 மற்றும் காதர் உள்ளிட்ட பலமுனை தாக்குதல் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இஸ்ரேலின் டெல் அவிவில் ஈரான் ஏவிய கொத்து குண்டு ஏவுகணை பல குண்டுகளை மழையாக பொழியும் வீடியோ காட்சிகளும் நேற்று வெளியாகின. இதில் டெல் அவிவின் கிழக்கே உள்ள ரமத் கானில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

எரிவாயு நிலையங்களை தாக்குவோம்: ஈரான்
ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மற்றும் அதன் கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள எரிவாயு, எண்ணெய் நிலையங்கள், கட்டமைப்புகளை தாக்குவதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி அச்சுறுத்தல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக சவுதியின் சம்ரெப் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகங்களும், ஐக்கிய அரபு எமிரேட்சின் அல் ஹசன் எரிவாயு வயல், கத்தாரின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் தாக்கப்படும் என எச்சரித்துள்ளது. இது மேற்கு ஆசியா போரை மேலும் விரிவுபடுத்தி உள்ளது.

இஸ்ரேல் உளவாளிக்கு மரண தண்டனை
இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஈரான் நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கவுரோஷ் கெய்வானி எனும் அந்த நபர் ஈரானின் முக்கிய இடங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். இதற்கிடையே, ஈரானின் தெற்கு பார்ஸ் மாகாணத்தில் உள்ள லாரெஸ்தான் மாவட்டத்தில் நீதித்துறை வளாகம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானதாக மிசான் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் நீதித்துறை பணியாளர்கள், கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா கண்டனம்
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகரான அலி லாரிஜானி கொல்லப்பட்டதை ஈரான் நேற்று உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘‘இறையாண்மை மற்றும் சுதந்திரம் பெற்ற ஈரான் மற்றும் பிற நாடுகளின் தலைமை அதிகாரிகளின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதையோ, அவர்களைக் கொல்வதையோ அல்லது ஒழிப்பதையோ நோக்கமாகக் கொண்ட எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். அத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என கூறி உள்ளார்.

ஈரான் அணு மின் நிலையம் மீது தாக்குதல்
ஈரானில் புஷேர் அணுமின் நிலையம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அணுமின் நிலையத்திற்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என ஈரான் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரபேல் க்ரோசி விடுத்த அறிக்கையில், ‘‘அணுக்கசிவு ஆபத்தை தடுக்க போரின் போது அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.

Tags : Iran ,spy minister ,minister ,Quds ,Dubai ,US ,Israel ,Supreme Leader ,Ayatollah Ali Khamenei ,Defense Minister ,Aziz Nasirzade ,National Security ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்திடம் இழப்பீடு கோரியது ஈரான் அரசு!