சென்னை: கிரீமி லேயர் வரம்புக்கு முற்றுப்புள்ளி வைத்து சமூகநீதியை நிலைநாட்டிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு அளித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் ‘கிரீமி லேயர்’ வரம்பைத் தீர்மானிப்பதில் நிலவி வந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூக நீதியை நிலைநாட்டியுள்ள உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வரவேற்கிறேன்.
குறிப்பாக, வெறும் சம்பள வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரீமி லேயர் முறையைத் தீர்மானிக்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் தெளிவுரை, இடஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்கப் போராடும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். ஒன்றிய அரசு 2004-ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு விளக்கக் கடிதத்தின் மூலம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றும் பெற்றோரின் வருமானத்தை இயந்திரத்தனமாகக் கணக்கிட்டு, தகுதியான பல மாணவர்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை மறுத்து வந்தது.
இது மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கும், இந்திரா சாவ்னி வழக்கின் அடிப்படை நோக்கத்திற்கும் எதிரானது என்பதை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது. அதிகாரத்துவத்தின் இத்தகைய தவறான அணுகுமுறையால், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் பல தகுதியான ஓபிசி மாணவர்கள் பணி நியமனம் மறுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. சென்னை, டெல்லி மற்றும் கேரளா உயர் நீதிமன்றங்கள் வழங்கிய முற்போக்கான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதி செய்திருப்பது, மாநிலங்களின் சமூக நீதிப் பார்வையை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது.
1993-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ குறிப்பாணையை மீறி, ஒரு விளக்கக் கடிதத்தின் மூலம் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்று நீதிமன்றம் கூறியிருப்பது, நிர்வாகத் தன்னிச்சைப் போக்கிற்கு விடப்பட்ட பலத்த எச்சரிக்கையாகும். வருமானத்தைக் காட்டி இடஒதுக்கீட்டை முடக்குவது என்பது சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும் செயலாகும்.
எனவே, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தவறாக கிரீமி லேயர் பிரிவில் சேர்க்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாகப் பணி நியமனம் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் இடஒதுக்கீட்டு முறையைச் சிதைக்கும் இத்தகைய குறுக்குவழி முறைகளைக் கைவிட்டு, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை நேர்மையுடன் வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
